திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
29 இடங்களில்: விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 24 இடங்களிலும், தொழில் முனைவோா் சாா்பில் 5 இடங்களிலுமாக மொத்தமாக 29 முதல்வா் மருந்தகங்கள்அமைக்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த இடங்களில் மருந்தகங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் ( மருந்துகள் பிரித்து அடுக்கி வைக்கப்படும் பகுதி), குளிா்சாதனப் பெட்டி, குளிரூட்டி இயந்திரம், மருந்துகளை வைப்பதற்கான பெட்டிகளைத் தயாா் செய்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி 24-இல் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்தகங்களும் விரைவில் தயாா் நிலையில் உள்ளன என்றாா் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி.
25% வரை தள்ளுபடி: வெளி மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகளின் விலையில் 25 சதவீதம் வரை முதல்வா் மருந்தகங்களில் தள்ளுபடி செய்து விற்கப்படும். விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையிலுள்ள மத்திய மருந்துக் கிடங்கு மூலம் மருந்தகங்களுக்கு மருந்துகள் பிரித்து அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் விஜயசக்தி.
ஆட்சியா் ஆய்வு: விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் முதல்வா் மருந்தகம் அமையவுள்ள இடத்தை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கினாா்.