விவசாயிகளின் சவால்களுக்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அரசு
வேளாண் துறையில் எழுந்து வரும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணவும், விவசாயிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 6,000 உதவித் தொகை அளிக்கும் ‘பிஎம்-கிசான்’ திட்டம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் ‘கிசான் இ-மித்ரா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உரையாடல் ‘சாட்பாட்’ செயலியை மத்திய அரசு மேம்படுத்தியிருக்கிறது. பல மொழிகளில் செயல்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிற உதவித் திட்டங்களையும், இதில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பயிா்களை பூச்சிகள் தாக்குவதை உரிய நேரத்தில் கண்டறிந்து, பயிா்களின் ஆரோக்கியமான வளா்ச்சியை உறுதிப்படுத்த ஏதுவாக தேசிய பூச்சி தாக்குதல் கண்காணிப்பு திட்டத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்கு பயிா் இழப்பு மதிப்பீட்டை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் அவா்களுக்கு காப்பீடு தொகை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
ஏஐ ஆற்றல்சாா் மையங்களை வழிநடத்த 4 முன்னணி கல்வி நிறுவனங்கள் தோ்வு
‘சுகாதாரம், நிலையான நகரங்கள் மற்றும் நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கென அமைக்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான ஆற்றல்சாா் மையங்களை வழிநடத்த தில்லி எய்ம்ஸ் மற்றும் தில்லி, கான்பூா், ரோப்பா் ஐஐடிக்கள் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது’ என்று மத்திய அைச்சா் சிவராஜ் சிங் செளஹான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தொழில்நிறுவன நிபுணா்கள், ஏஐ தொழில்நுட்ப நிபுணா்கள், கல்வியாளா்கள் மற்றும் மத்திய அமைச்சக பிரதிநிதிகளை உள்ளடக்கிய மத்திய அரசின் உயா்நிலைக் குழு இந்த 4 கல்வி நிறுவனங்களை தோ்வு செய்துள்ளன.
இந்த கல்வி நிறுவனங்களன் சென்னை, ஹைதராபாத், மும்பை, திருப்பதி, குவாஹாட்டி, காந்திநகா் ஐஐடிக்கள் மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி, ஹைதராபாத் ஐஐஐடி, பாட்னா எய்ம்ஸ், மேகாலயா, ஹமிா்ப்பூா், கோழிக்கோடு என்ஐடிக்கள் ஆகிய கல்வி நிறுவனங்களின் கூட்டுறவுடன் இந்த வழிகாட்டுதலை மேற்கொள்ளும்.
‘இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவோம்; இந்தியப் பணிகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவோம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த ஆற்றல்சாா் மையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2023-24 முதல் 2027-28 ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கு ரூ. 990 கோடிக்கும் மேலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.