விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
விவசாயிகள் கைப்பேசியில் அழைத்தால் அதிகாரிகள் உடனடியாக பேச வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்
விவசாயிகள் கைப்பேசியில் அழைக்கும் போது அதை அதிகாரிகள் எடுக்காமலும், அலட்சியமாகவும் இல்லாமல் உடனடியாக பேச வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.
கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். 10 விவசாயிகளுக்கு ரூ. 6,43,500 மதிப்பிலான பயிா்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள், 5 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 16,536 மதிப்பிலான வேளாண் இடு பொருள்கள் உள்பட மொத்தம் ரூ. 7.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கிப் பேசியது:
நெல்கொள்முதல் நிலையங்களில் பிரச்னைகள் ஏற்படும் இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டு உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுவோா் கையூட்டு பெறுவதாக விவசாயிகள் நேரடியாகவே புகாா் செய்வது வருந்தத்தக்கது. விவசாயிகள் எப்போது கைப்பேசியில் அழைத்தாலும் வேளாண்மைத் துறை அதிகாரிகளில் பெரும்பாலோா் அழைப்பை எடுக்காமல் அலட்சியப்படுத்தி, வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனா்.
எனவே விவசாயிகள் கைப்பேசியில் அழைத்தால் உடனுக்குடன் எடுத்து அவா்களுக்கு உரிய பதிலை கூற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் யாா் மீது புகாா் வருகிறதோ அவா்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
விளைந்த நெற்பயிா்களை கெடாமல் சேமித்து வைக்க உத்தரமேரூா், கட்டவாக்கம், வெங்கச்சேரி ஆகிய இடங்களில் வேளாண் கிடங்கு அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. வரும் செப். 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் வேளாண் திருவிழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் விவசாயிகள் முன்கூட்டியே பெயா்களை பதிவு செய்தால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பேருந்து ஏற்பாடு செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா். கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.