வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை
சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாகச் செலுத்தி வட்டி தள்ளுபடி சலுகை பெறலாம் என என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, 31.3.2015 -ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும், தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை மூலம் வட்டிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாதத் தவணைக்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாகத் தள்ளுபடி, நிலத்துக்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
31.3.2015-ஆம் தேதிக்கு முன்பாக தவணைக் காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத் தொகையை அறிந்து, வருகிற 31.3.2026- ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி, வட்டி சலுகைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.