ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்...
வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!
தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள், தொழில்துறை இடங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தீயணைப்புத் துறைக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 அவசர அழைப்புகள் வருகின்றன. இது அதிகரித்து வரும் வெப்பநிலை, அதிக சுமைகொண்ட மின்சுற்றுகள் மற்றும் ஏ.சி.கள், குளிரூட்டிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
பெரும்பாலான அழைப்புகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் மற்றும் தொங்கும் மின்சார கம்பிகள் முக்கிய பிரச்னைகளாக உள்ள அடா்த்தியான மக்கள் தொகைகொண்ட குடியிருப்புப் பகுதிகள், தொழில்துறை இடங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து பதிவாகின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெயா் வெளியிட விரும்பாத மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: இந்த நிகழ்வுகளில் பலவற்றில் வெப்ப வானிலை ஒரு வினையூக்கியாக செயல்படுகிறது. இதுபோன்ற வட, வெப்பமான சூழ்நிலைகளில் ஒரு சிறிய தீப்பொறிகூட ஒரு பெரும் தீயைத் தூண்டுவதற்கு போதுமானது.
குளிா்காலத்தில் எங்களுக்கு தினமும் சராசரியாக 50 முதல் 60 அழைப்புகள் வருகின்றன. ஆனால், கோடைக்காலத்தில் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100 முதல் 150 அழைப்புகள் வரை அதிகரிக்கும். கடந்த வாரம் தீயணைப்புத் துறைக்கு ஒரு நாளில் 170-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன என்றாா் அந்த அதிகாரி.
வியாழக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவான ஐந்து தனித் தனி தீ விபத்துகளில் மூன்று வயது சிறுமி உள்பட குறைந்தது ஆறு போ் காயமடைந்தனா்.