சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
`வேல்முருகன் மாதிரி நாங்க பேசணும்னு எதிர்பார்க்கக் கூடாது..!’ - விசிக ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்
``சட்டமன்றத்தை தி.மு.க அரசு மிகுந்த நாகரிகத்தோடு நடத்தியதாக சொல்கிறீர்கள்... பிறகு ஏன் அவை நடவடிக்கைகளை நேரலை செய்யவில்லை?”
``சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வோம் என்பது 2021-ல் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்காத ஜனநாயக விரோத பா.ஜ.க அரசே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை நேரலை செய்யும்போது மிகுந்த ஜனநாயக முறையில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளையும் நேரலை செய்யாமல்விட்டது குறைபாடுதான். முன்பு சட்டமன்றம் மிகக் குறைந்த நாட்கள் நடந்ததை சுட்டிக்காட்டினோம். இம்முறை கூடுதல் நாட்கள் நடத்தப்பட்டன. அதேபோல அவை நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வி.சி.க-வுக்கு இருக்கிறது!”

``தி.மு.க கூட்டணியிலிருந்து கொண்டே தி.மு.க-வை நம்பி நாங்கள் இல்லை எனப் பேசுவது புதிராக இருக்கிறதே.. வேறு வழியில்லாமல் தி.மு.க கூட்டணியில் தொடருகிறீர்களா?”
``தி.மு.க-வை நம்பி வி.சி.க கிடக்கிறது, நத்திப் பிழைக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனம் வரும்வேளையில் `தி.மு.க-வை நம்பி வி.சி.க இல்லை` என எங்களை தலைவர் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார். பா.ஜ.க மீதோ.. அ.தி.மு.க மீதோ எதாவது விமர்சனம் வைத்தாலே `தி.மு.க-வின் தலித் பிரிவு வி.சி.க` என விமர்சனம் வைக்கிறார்கள். இன்றைக்கும் த.வெ.க-வும் அப்படி பேச ஆரம்பித்துவிட்டது. ஆகையால், தி.மு.க நம்பி நாம் இல்லை என்பதை சொன்னாரே தவிர, அது கூட்டணிமீதான அதிருப்தியாக சித்தரிக்க வேண்டாம். அதேபோல் வி.சி.க எங்கள் கூட்டணிக்கு வராதா என ஏங்கிக் கிடப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாங்கள்தான் கதவுகளை மூடிவிட்டோம்”
``மதுவிலக்கு மாநாடு நடத்தி, கடைகளை மூடினால்தான் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்றீர்கள்.. இன்றைக்கு மதுக்கடைகள் வருமானம் 50,000 கோடியை தொட்டிருக்கிறதே!”
``எல்லா சமூக பிரச்னைகளுக்கும் வி.சி.க-தான் பொறுப்பு என திணிக்கக் கூடாது. கூட்டணியில் இருந்துகொண்டே `மதுவிலக்கு` குறித்த பேசுபொருளை நாங்கள் ஏற்படுத்தினோம். நாங்கள் தூண்டிய பிரச்னைகளை இங்கே வேறு யாராவது பேசினார்களா..? எங்கள் தலைவர் மக்களுக்கு உண்மையாக இருந்து சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆக, இந்த கேள்வியை மற்றவர்களிடம் போய் கேளுங்கள்”

``சட்டமன்றத்தில் தி.மு.க சின்னத்திலேயே வென்ற வேல்முருகன் காட்டும் ஆவேசத்தைகூட, தலித் பிரச்னைகளில் வி.சி.க காட்டுவதில்லை என்கிறார்களே!”
(கோபத்துடன்) ``தலித் பிரச்னைகளை வி.சி.க பேசவில்லை என்பதும் வி.சி.க மட்டும்தான் தலித் பிரச்னைகளை பேச வேண்டும் என்பதும் அபத்தமான கருத்து. எத்தனையோ கவனயீர்ப்பு தீர்மானங்களை, கோரிக்கை மனுக்களையும், தனித்த சந்திப்புகளையும் மேற்கொள்கிறோம். ஆனால் எங்களை தவிர தலித் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையாவது அடையாளம் காட்டுங்கள். எடப்பாடி பேசினாரா... தலித்துகளும் இந்துக்கள்தான் என்ற நோக்கில் நயினார் நாகேந்திரன் என்றாவது பேசினாரா..? வேங்கைவயல் விவகாரத்தில் சம்பவத்தில் நடந்த நாள் தொடங்கி இன்றுவரை நாங்கள் போராடுகிறோம். எல்லோரும் ஒன்றிணைந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். அதேசமயம் அண்ணன் வேல்முருகன் பாணியிலேயே சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும் என எதிர்ப்பார்ப்பது மிகத் தவறு”
``காஷ்மீர் விவகாரத்தில் முதற்கட்ட விசாரணைக்கூட முடியாத சூழலில் முந்திக் கொண்டு `உளவுத்துறை பெயில்.. அமித் ஷா பதவி விலக வேண்டும்` எனப் பேசுவது அதீதமாக என்கிறார்களே!”

(கோபத்துடன்) ``விசாரிப்பதற்கு முன்பாகவே, இந்துக்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர் என பரபரப்புரை செய்து இஸ்லாமிய வெறுப்பை பா.ஜ.க தூண்டுவது ஏன்? விசாரணை முடிவுகளுக்கு முன்பே பாகிஸ்தான்மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் தூதரகம் முன்பு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்? சரி, பாகிஸ்தான்தான் காரணம் எனில் எல்லை பாதுகாப்பில் இந்தியா டோட்டல் பெயிலியர் ஆகிவிட்டதுதானே? ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தும் லட்சணத்தில்தான் நாட்டின் பாதுகாப்பு இருக்கிறதா? ஆக தாக்குதல் சம்பவத்தை சந்தர்பவாதமாக பயன்படுத்தி மதவாத அரசியல் செய்வது பா.ஜ.க மட்டும்தானே தவிர நாங்கள் அல்ல.. இந்நேரம் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்தால் பா.ஜ.க வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்”