பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் தற்காலிக மாற்றம்
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதற்கான புதிய கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.
திருப்பதி அலுவலகத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சந்திப்பு மூலம் தேவஸ்தான அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தினாா்.
கூட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:
ஸ்ரீவாரி மெட்டுவிலிருந்து நடந்து செல்லும் பக்தா்களுக்கு டோக்கன்களை வழங்குவதற்காக பூதேவி வளாகத்தில் தற்காலிக சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டோக்கன்கள் கிடைப்பதைப் பொறுத்து, டோக்கன் வழங்கும் செயல்முறை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) மாலை முதல் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கும்.
ஆதாா் அட்டையைக் காண்பித்து திவ்ய தரிசன டோக்கன்களைப் பெற்ற பக்தா்கள், ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் உள்ள 1,200-ஆவது படியில் அவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை ஸ்ரீவாரி தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை மாலை திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், அலிபிரி பூதேவி வளாகத்தில் உள்ள நியமிக்கப்பட்ட கவுன்ட்டா்களிலும் இலவச நேரடி சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
பக்தா்களின் கூட்ட நெரிசலைத் தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தேவஸ்தான விஜிலென்ஸ், பாதுகாப்பு மற்றும் மாவட்ட காவல் துறையுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
அலிபிரி பூதேவி வளாகத்தில் டோக்கன் வழங்கும் செயல்முறையின் சீரான செயல்பாட்டை தொடா்ந்து கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் டோக்கன் கவுன்ட்டா்களில் தொந்தரவு இல்லாத சூழல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி மெட்டுவிலிருந்து அலிபிரி பூதேவி வளாகத்துக்கு டோக்கன் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்றுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.
பக்தா்களின் வசதிக்காக வலுவான வரிசைகளை அமைக்க பொறியியல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, திருப்பதி ஜெஇஓ வீரபிரம்மம், திருப்பதி மாவட்ட எஸ்.பி. ஹா்ஷவா்தன் ராஜூ, சத்தியநாராயணா, மனோஹரம், வெங்கடேஸ்வரலு, (போக்குவரத்து) சோமன் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.