கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!
ஹமாஸ் படைகளுக்கு எதிராக போராடும் பாலஸ்தீனர்கள்?
காஸா பகுதியில் போருக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் படையினருக்கு எதிராக பாலஸ்தீனர்கள் முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.
காஸாவின் வடக்கு நகரமான பெயிட் லஹியாவில் போரில் சேதாரமடைந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் போருக்கு எதிரான போராட்டத்தில் நேற்று (மார்ச் 25) ஈடுபட்டனர்.
இதுகுறித்து வெளியான விடியோக்களில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ’போரை நிறுத்துங்கள்’, ‘நாங்கள் சாக மறுக்கின்றோம்’, ‘எங்கள் குழந்தைகளின் ரத்தம் மலிவானது இல்லை’ போன்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்கும் நிவாரணப் பொருள்கள் காஸாவினுள் நுழையாமல் தடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போருக்கு எதிராக சிறிய மக்கள் குழுவினால் துவங்கப்பட்ட இந்த போராட்டத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், போராட்டத்தின் இடையே பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸுக்கு எதிராக ”ஹமாஸ் வெளியேற வேண்டும்’ என முழங்கப்பட்ட கோஷங்கள் அனைத்தும் வெளியான விடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை சுமார் 17 மாதங்களாக நீடித்த போரின் நிறுத்ததை முறித்து இம்மாதம் இஸ்ரேல் காஸா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. ஹமாஸிடமுள்ள 59 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை என்றால் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
தற்போது துவங்கப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் போரில் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச் மாதத்தின் துவக்கத்தில் காஸாவினுள் நுழையும் உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!