பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரோஹித் சர்மா தினமும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் முதலிரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.
முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் 8 ரன்களுக்கு போல்ட் ஆனார்.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:
பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா மோசமான நிலையில் இருக்கிறார். 3, 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ரோஹித் சர்மா தற்போது இல்லை.
தினமும் காலையில் கடினமாக உழைத்து தன்னை சிறந்த நிலையில் வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் ரோஹித் சர்மா.

ஏனெனில், அவரை விட்டு பேட்டிங் கை நழுவிச் செல்கிறது. அவர் இப்போதும் தன்னுடைய இயற்கையான திறமைகளையும் உள்ளுணர்வுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்.
வான்கடே பிட்ச்சிலும் மும்பை தோற்கும்
ஏபிடி, கிளாசன் தவிர மற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய மண்ணில் சரியாக விளையாடுவதில்லை.
ரியான் ரிக்கல்டனுக்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். அவரைத் தவிர்த்து, திலக் வர்மா, சூர்யகுமார், ராபின் மின்ஸ் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.
பேட்டிக்கு பந்து வருமென இவர்கள் நம்பியிருக்கிறார்கள். வேகமும் பவுன்சர்களும் இருக்கும் வான்கடே பிட்ச்சிலும் மும்பை அணி 12 அல்லது 13 ரன்கள் தேவைப்பட்ட இலக்கினை வெற்றி பெறாது. வேண்டுமானால் இலக்கிற்கு அருகில் வரலாம்.
அணிக்கு என்ன பிரச்னை?
குஜராத் டைட்டன்ஸ் முதலிரண்டு விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தனர். ஆனால், மும்பை அணி 35க்கு 2 விக்கெட்டுகள் ஆனார்கள். அதன்பிறகு திலக், சூர்யகுமார் பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டியுள்ளது. பின்னர் 190 ரன்களை துரத்திச் செல்லுவது கடினமாகிறது.
கடைசி நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பேட்டிங் நன்றாக செய்தார்கள். ஒரு ஓவரில் 15 அல்லது 20 ரன்கள் இருக்குமாறு விளையாடினார்கள்.
ஆட்டத்தில் ஈரப்பதமும் வரவே இல்லை. அதனால், மும்பை அணிக்கு எல்லாம் பின்னடைவையே ஏற்படுத்தியது.
இவையெல்லாம்விட 2 தோல்விகள் என்பது மும்பை இந்தியன்ஸுக்கு சகஜமானதுதான். அப்படி இருந்தும் சரியான வழியில் சென்றால் கோப்பையை வெல்லலாம் என்றார்.