அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?
"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.
நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. என்னைச் சுற்றி விமானத்தின் சிறு சிறு துண்டுகள் கிடந்தன.
என் இருக்கை அருகே விரிசல் ஏற்பட்டது. அதன் வழியே வெளியே குதித்தேன். எழுந்து ஓடினேன்.
யாரோ என்னை இழுத்து, ஆம்புலன்சில் போட்டு, மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்"
இது விஸ்வாஷ் குமார் ரமேஷ் 'ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு' கொடுத்த பேட்டி.

யார் இந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ்?
நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்தான் இந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ். இவர் பிரிட்டிஷ் குடிமகன் ஆவார். ஆனால், விஸ்வாஷ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவரும், அவரது சகோதரரும் தங்களது குடும்பத்தைப் பார்க்க, இந்தியா வந்துள்ளனர். மீண்டும் லண்டன் செல்வதற்காகப் பயணித்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இவரது சகோதரர் உயிரிழந்த நிலையில், இவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
சீட் நம்பர் 11A
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த இவர் சிறு, சிறு காயங்கள், ஆங்காங்கே ரத்த கறைகளுடன் எழுந்து சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ நேற்று வைரலானது.
'இவருக்குப் பெரிய பாதிப்பு இல்லை' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பிய இவர் பயணித்த சீட்டின் நம்பர் '11A'.
இந்த சீட் எமர்ஜென்சி கதவுகளுக்கு அருகில் உள்ளது மற்றும் விமானத்தையும், அதன் இறக்கைகளையும் இணைக்கும் பகுதியில் இருக்கும் சீட் இது.

விமானம் தரையில் விழும்போது, இந்தப் பகுதியில் பலத்த அடி இருக்கும். அப்படி இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் உயிர் தப்பினார் என்பது மிகுந்த ஆச்சரியம் என்று விமானத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
அந்த விமானத்தின் போர்டிங் பாஸ் இன்னமும் விஸ்வாஷிடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது!