அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி
காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்தாரிடம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முதல்வரின் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், புதன்கிழமை (ஜூலை 2) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (27) , சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், காரைக்குடி டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட புல எண். 40-11-ன் படி 0.01.20 ஏர்ஸ் (3 சென்ட்) பரப்பளவில், அஜித்குமார் தாயார் மாலதிக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Summary
Ajith Kumar's younger brother gets a government job! He gets a free house and plot!