அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி
அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே தொடர்ந்து 10-வது இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிக்க: அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு
எம்.எஸ்.தோனி கூறியதென்ன?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் விளையாடவுள்ள மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். அடுத்து உள்ள போட்டிகளில் வெல்வதைக் காட்டிலும் அடுத்த சீசனுக்கான அணியை வலுவாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இதையும் படிக்க: பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
அணியில் அடுத்தடுத்து நிறைய மாற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், சிறப்பான பிளேயிங் லெவனை உருவாக்கி அடுத்த சீசனுக்கு வலுவான அணியாக களமிறங்க வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.