கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தந்தையின் வலி! - மகளுக்கு ஒரு மடல் #உ...
அதிமுக-வை பதம் பார்த்ததா முருக பக்தர்கள் மாநாட்டு வேல்... உற்சாகத்தில் திமுக!
```சூரனை வதம் செய்த முருகா, திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா' என்று தி.மு.க-வை குறிவைத்து பரவலாக விளம்பரம் செய்யப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, கடைசியில் அ.தி.மு.க-வை பதம் பார்த்துவிட்டது..." என்று குஷியாக பேசி வருகிறார்கள் தி.மு.க ஆதரவாளர்கள்.

"அரசியல் பேசமாட்டோம், ஓட்டு கேட்க மாட்டோம், இது ஆன்மிக மாநாடுதான்" என்று உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துவிட்டு, அரசியல் மாநாடாக நடந்து முடிந்துள்ளது" என்று தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினரால் குற்றம்சாட்டப்படும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திரளாக மக்கள் வந்திருந்தது இந்து முன்னணியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கடைசியில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
முருக பக்தர்கள் மாநாடு
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை மையமாக வைத்து உ.பி முதல்வர் யோகி, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துவதாக அறிவித்த இந்து முன்னணி, கடந்த 3 மாதங்களாக இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்தது. இந்து முன்னணி மட்டுமின்றி மக்களைத் திரட்டிக் கொண்டுவரும் பணியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் தீவிரமாக இறங்கி செயல்பட்டது. அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு அளித்தன.
காவல்துறை தரப்பில் மாநாட்டுக்கு முதலில் அனுமதி மறுத்தாலும், 'அரசியல், மதம் குறித்து பேசக்கூடாது' என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் வேலைகளைத் தொடங்கிய இந்து முன்னணியினர், ஒரு வாரத்துக்கு முன் அறுபடை வீடுகளின் மாதிரியை அங்கு அமைத்து விளம்பரப்படுத்த, அதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வர ஆரம்பித்தார்கள். இது மாநாட்டுக்கு பெரிய விளம்பரமாக அமைந்தது.

மதுரை ஆதீனம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜி.கே.வாசன், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி ஆளுநர், அமைச்சர் நமச்சிவாயம், நடிகர் ரஞ்சித் என பலரும் வந்து அறுபடை வீடு மாதிரியை பார்வையிட்டு வணங்கிச் செல்ல மாநாடு குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது.
நடிகர் ரஜினிகாந்த், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகள், ஒரே கொள்கையில் இருந்தாலும் அர்ஜூன் சம்பத்துக்கு அழைப்பு கொடுக்காதது மட்டுமின்றி மாநாட்டை சொல்லி நன்கொடை வசூல் செய்ததாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது புகாரும் எழுப்பினர்.
இதற்கிடையே மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் பாஸ் வாங்கி வர வேண்டும் என்ற உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட ஏற்பாட்டாளர்கள் இன்னும் மகிழ்ச்சியானார்கள்.
யோகி ஆதியத்நாத் வரவில்லை என்ற கடைசி நேரத் தகவலால் ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் சோர்ந்து போனாலும், பவன் கல்யாண் மீது நம்பிக்கை வைத்து விழா ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்தார்கள்.
மாநாட்டுக்கு முதல் நாளே வாழ்த்துகளை தெரிவித்த எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் வேல் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதன்பிறகு செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் மாநாட்டில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார்.
முதல் நாளே பல மாவட்ட மக்களும் மதுரைக்கு வாகனத்தில் வரத் தொடஙகியதால், ஒத்தக்கடை- பாண்டி கோயில் - விரகனூர் - சிந்தாமணி நெடுஞ்சாலை மட்டுமின்றி மதுரை நகருக்குள்ளும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 மணிக்கு கிளம்பி மதுரைக்கு 12 மணிக்கு வந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தனி விமானம் பழுதடைந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை.
சென்னையிலிருந்து முன்பே வந்த அண்ணாமலை, பவன் கல்யாணை வரவேற்க விமான நிலையத்தில் நயினாருடன் காத்திருந்தார். விமான நிலையத்தில் பவன் கல்யாணின் பாதுகாவலர் தமிழிசையை இடித்துவிட, அதற்கு தமிழிசை முகத்தை சுளித்து அதிருப்தியை தெரிவிக்க, பவன் கல்யாண் அவரை சமாதனப்படுத்திய சம்பவமும் நடந்தது. நித்யானந்தா சீடர்களும் பவனை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தனர்.

மாநாட்டுக்கு இரு நாட்களுக்கு முன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த திருநகர் வீட்டிலிருந்து வேல் எடுத்து ஊர்வலமாக வந்த இராம ஸ்ரீநிவாசன், "சூரனை வதம் செய்ய பார்வதியிடம் வேல் பெற்றார் முருகன், அதுபோல் சூரியனை வதம் செய்ய தேவரிடம் வேல் பெற்றுச் செல்கிறேன்" என்றவர், பாடகர் டி.எம்.எஸ் சிலைக்கு மாலை அணிவித்தும் தன்னை தனியாகக் காட்டிக் கொண்டர்.
மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் அவ்வப்போது பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோர் பார்வையாளராக கலந்துகொண்டனர், மேடையில் பேசவில்லை.
நிகழ்ச்சி தொடக்கத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போதுதான் இந்து முன்னணியின் வரலாறு திரையிடப்பட்டது. அதில், திராவிட இயக்கத் தலைவர்கள் பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 'தங்கள் கட்சியின் பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்திருக்கும் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா அங்கு அமர்ந்திருந்தபோதும் எந்த எதிர்வினையும் செய்யவில்லை' என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க-வுக்கு எதிராக திருப்பியுள்ளது.
முருகனின் அவதாரமாக..!
பவன் கல்யாண் வேட்டி, சட்டை, பச்சைத் துண்டுடன் மேடைக்கு வந்தபோது மக்கள் மத்தியில் உற்சாக குரல் எழுந்தது. நீண்ட நேரம் தமிழில் உரையாற்றிய பவன் கல்யாண், பேச்சைத் தொடங்கும்போது "தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார், முருகன் அவதாரத்திலேயே வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டது, வந்திருந்த பா.ஜ.க-வினரில் ஒரு தரப்பினரை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தாலும், 'தங்கள் சமூகத் தலைவர்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லையே, அதைப்பற்றி அவரிடம் நம் தலைவர்கள் சொல்லவவில்லையா' என்று மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பவன் கல்யாண் பேச்சால் நயினார் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தார்.
"முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்கிறது. எல்லோரையும் சமமாக பார்த்து தீயவர்களை வதம் செய்து அநீதியை அழித்தவர் என்பதால் உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான் தான்" என்று பவன் கல்யாண் பேசியதைப் பார்த்து, ஒன்றும் சொல்ல முடியாமல் மேடையில் இருந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் நெளிந்தார்கள்.

`ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’
அண்ணாமலை பேசும்போது, "குழந்தைகளுக்கு நம் வாழ்வியலை கற்றுக்கொடுக்க வேண்டும். நம் அடையாளத்தை உரக்க சொல்ல வேண்டும். சமீபத்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு ஒரு கட்சித் தலைவர் திருநீரை அழித்து செல்பி எடுத்தார். அவர் தேர்தலின்போது ஓட்டுக் கேட்டு வருவார், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இந்து மதத்திலிருந்து ஒருவர் கூட மாற்று மதத்திற்கு செல்லக்கூடாது. சென்றவர்களை திரும்பக் கொண்டு வரவேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிதி வேண்டாம், சுவாமி வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். இனி தமிழக அரசியலில் முருகன் மாநாட்டுக்கு முன், மாநாட்டுக்கு பின் என்ற நிலை ஏற்பட்டுள்ளது" என்று பேசியவர், உலகிலுள்ள ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கையை தெரிவித்தார்.
`நல்ல வைப்ரேஷன் கிடைக்கிறது’
நயினார் நாகேந்திரன், "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரக்கடவுள் இருப்பார். முருகன் என்றால் அழகு, தமிழ்க்கடவுளின் மாநாடு நடக்கக் கூடாது என்று பல தடைகளை ஏற்படுத்தினார்கள். நீதிமன்றம் மூலம் நீதி கிடைத்தது. இங்கு எனக்கு நல்ல வைப்ரேஷன் கிடைக்கிறது. தமிழ், தெலுங்கு என்றாலும் நம் கலாசாரம் ஒன்றுதான்" என்று திருப்புகழ், திருவாசகத்தை மேற்கோள் காட்டி, பக்தி பாடல் பாடி அசத்தினார்.
இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம், தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு கொடுக்க அனுமதி கேட்டோம், கொடுக்கவில்லை. அவர் வந்திருந்தால் இந்த மேடையில் அவர் பேசியிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு கொடுத்தோம். மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தவர், முன்னாள் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார். இந்த மாநாட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு முருகனுக்கு விரதம் இருந்தார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். இந்த மாநாட்டுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறும் அவர், அது எங்கிருந்து வந்தது என்று கூறவேண்டும். திருமாவளவன், வைகோ, சேகர் பாபு போன்றோர் செய்த விமர்சன விளம்பரஙகளால்தான் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளார்கள். இது மிகப்பெரிய ஆன்மிகப் புரட்சி" என்றார்.

சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் இதைப்போல 5 மாநாடுகளை நடத்த திட்டுமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதே நேரம், இந்த மாநாட்டின் வெற்றி ஆளுகின்ற தி.மு.க-வுக்கு குடைச்சலைக் கொடுக்கும் என்று பா.ஜ.க-வினர் நினைத்த நிலையில், திராவிட எதிர்ப்பு பேச்சு, பெரியார், அண்ணா குறித்தான விமர்சனம் அ.தி.மு.க-வினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதை தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பேசி வருவதால் அதற்கு நேரடியாக விளக்கம் அளிக்க முடியாமல் சமாளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி முதல் வேலுமணி, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் அ.தி.மு.க-வுக்குள் விவாதமாக போய்க் கொண்டிருக்கிறது.