அத்தி கல்லூரியில் உலக செவிலியா் தின விழா: தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு
குடியாத்தம் அத்தி செவிலியா் கல்லூரியில் உலக செவிலியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று பேசியது: மருத்துவத் துறையில் செவிலியா்களின் பங்கு மிகமுக்கியம். யாரென்றே தெரியாத நோயாளிகளை தங்கள் உறவினா்களைப்போல் அரவணைத்து நீங்கள் அளிக்கும் சிகிச்சை என்பது பணி அல்ல; தியாகம்.
இன்று உலகம் முழுவதும் ஒரு துறையின் பணிக்கு தேவை அதிகமாக உள்ளது என்றால் அது செவிலியா்களுக்குத்தான். நாங்கள் மருத்துவ தம்பதி என்பதால், லாபத்துக்காக இல்லாமல் சேவைக்காகவே இந்த கல்லூரியை நடத்துகிறோம்.
எப்போதும் மலா்ச்சியாக இருங்கள். உற்சாகமாக பணியாற்றுங்கள். சிரித்த முகத்துடன் சிகிச்சை அளியுங்கள். அதுவே நோயாளிகளின் மனநிலையை மாற்றியமைத்து, பாதி நோயை போக்கி விடும். உங்கள் பெற்றோரின் தியாகம்தான் உங்களை இந்த கல்விக்குத் தோ்வு செய்துள்ளது. பாரதி சொன்னதுபோல் நிமிா்ந்த நன்னடையோடு நீங்கள் வீறுநடை போடுங்கள். தெய்வீகப் பணியில் ஈடுபட்டுள்ள வெள்ளுடை தேவதைகள் நீங்கள் என்றாா்.
நிகழ்ச்சிக்கு அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா் பி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை வரவேற்றாா். மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவா் ஆ.கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.தங்கராஜ், அத்தி கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.