அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா ஜூலை 18-இல் தொடக்கம்: அமைச்சா் ராஜேந்திரன் தகவல்
ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை உள்பட 4 நகரங்களில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கு ஒருநாள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா திட்டம் ஜூலை 18-இல் தொடங்கவுள்ளதாக செய்துள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, வரும் ஜூலை 18 முதல் ஆக.15 வரை வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இதில், சென்னையில் ஒரே நாளில் 8 அம்மன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம், ஒரே நாளில் 10 அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் என 2 திட்டங்கள் உள்ளன.
அதேபோல், மதுரை, தஞ்சாவூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கும் ஒரு நாள் சுற்றுலா திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோயில்களில் சிறப்பு தரிசனம், அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும். இதில், திட்டத்துக்கு ஏற்ப ரூ.800 முதல் ரூ.1,100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ராமேசுவரம் சுற்றுலா: மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோயில்களை ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் வகையில், 5 நாள்களில் 108 அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா மற்றும் ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் ராமேசுவரம் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இச்சுற்றுலாக்களில் செல்ல விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 1800 - 42531111, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் இரா. ராஜேந்திரன்.