பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!
''அம்மா செயினை அடகுவெச்சு ஆரம்பிச்சோம்'': நான்கு தலைமுறைகளாக வாசகர்களை ஈர்க்கும் நெல்லை புத்தகக்கடை
1968-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது திருநெல்வேலியின் ஈகிள் புக் சென்டர் (Eagle Students Book Centre). அந்தக் குட்டிக்கடை தான் இப்போது நான்கு தலைமுறை வாசகர்களைக் கொண்ட இடமாக மாறி இருக்கிறது. அங்கு ஒரு விசிட் அடித்தோம். உள்ளே நுழைந்ததுமே புதிய காகிதங்களின் மணம் நம்மை வரவேற்கிறது.
கூடவே, ஈகிள் புக் சென்டரின் உரிமையாளர் சி.சௌந்தர்ராஜும் நம்மை வரவேற்று பேசுகையில்...

முதலீடு வெறும் ரூ.1500
"1965-ல இருந்து மூணு வருசம் திருநெல்வேலியில இருக்க ஒரு புத்தகக் கடைல வேலை பாத்துகிட்டு இருந்தேன். அங்க கிடைச்ச அனுபவத்தை வெச்சு, ஒரு புத்தகக் கடை ஆரம்பிக்கணும்ங்கற எண்ணத்துல வெளிய வந்தேன்.
எண்ணத்துக்கு ஏத்த மாதிரியே 1968-லேயே இந்தக் கடையைத் திறந்துட்டேன்.
அப்போ என்னோட முதலீடு வெறும் ரூ.1500. அதுவும் அம்மா செயினை அடகு வெச்சு கிடைச்ச பணம். அதை வெச்சு தான், நானும், எங்க அப்பாவும் இந்தக் கடைய ஆரம்பிச்சோம்.
அப்போ, இந்தக் கடையோட பேரு ஸ்டுடென்ட்ஸ் புக் சென்டர்.
அடுத்ததா, 1972-ல திருநெல்வேலி ஜங்க்ஷன்ல இன்னொரு கடைய திறந்தோம்" என்று கூறுபவரின் கடையில் இருக்கும் தற்போதைய ஸ்டாக்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி.
"இந்த வளர்ச்சிக்கு காரணம் எங்களோட கடின உழைப்பும், கடவுளின் மகிமையும் தான். ஒவ்வொரு மாசமும் போதுமான டர்ன் ஓவர் வருது.
இந்தக் கடை முதன்முதல்ல ரொம்ப குட்டிக்கடையா, முழுக்க முழுக்க மாணவர்களுக்காகன் எஜுகேஷனல் புக்ஸ் மட்டுமே வெச்சு ஆரம்பிச்ச கடை. இப்போ தன்னம்பிக்கை, போட்டித் தேர்வுகள், நாவல்கள், அரசியல், கவிதைகள்னு பல ஜானர்களை எங்ககிட்ட புத்தகங்கள் கொட்டி கிடக்கு. அதனால, எல்லா வயசுல இருந்தும் தினம் தினம் 200 - 500 கஸ்டமர்கள் வர்றாங்க" என்கிற சௌந்தர்ராஜிடம் அவர் படிப்பு குறித்து கேட்டால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

எல்லா விஷயமும் எனக்கு அத்துப்படி
"நான் மூணாவது தான் படிச்சுருக்கேன். ஆனா, எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்கணும்ங்கற எல்லா விஷயமும் எனக்கு அத்துப்படி. நான் 13 வயசுல வேலைக்கு போக தொடங்குனேன். இப்போ எனக்கு வயசு 73. இப்போ எனக்கு இந்தத் துறையில மொத்த 57 வருஷ அனுபவம் இருக்கு.
வயசு ஆயிடுச்சுனு எல்லாம் நான் நினைக்கறது இல்ல. இப்பவும் நான் தினமும் கடைக்கு வர்றேன். ஒவ்வொரு கஸ்டமர்களையும் அட்டென்ட் பண்றேன்.
திருநெல்வேலில இருக்கிறேன்னு தான் பேரு. ஆனா, நான் பக்கத்துல இருக்க குற்றாலத்தைக் கூட கண்ணுல பாத்தது கிடையாது. என்கிட்ட செல்போன் கூட கிடையாது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையே இந்த புக் சென்டர் தான்".
'ஈகிள்' - பெயர் காரணம்
'ஈகிள்' என்ற வார்த்தை எப்படி இவரது கடை பெயரில் இடம்பெற்றது என்பதை விளக்குகிறார்... "40 வயசுக்கு பின், கழுகோடு வலிமை கொஞ்சம் கொஞ்சமா குறையும். உடனே, அது மலை முகடுகளுக்கு போய், அதோட அலகுகளை, நகங்களையும் புதுப்பித்து கொள்ளும். அதுக்காக தான், எங்களது கடையின் பெயரில் 'ஈகிள்' என்ற வார்த்தையைச் சேர்த்துகொண்டோம்" என்பவர் இன்னும் தொடருகிறார்.
"வீட்டில் மனைவிக்கும், சர்ச்சில் கடவுளுக்கும் அடிமையாக இருப்பது போல, கடையில் நான் கஸ்டமர்களுக்கு அடிமை. ஒரு காலத்தில் என்னிடம் சைக்கிள் வாங்க கூட கையில் காசு இருந்ததில்ல. ஆனா, இப்போ வீட்டு முன்னாடி நாலு கார்கள் நிக்குது. இதுக்கு காரணமே கஸ்டமர்கள் தான். அவங்க தான் என்னை வாழ வைக்கிறாங்க. அதனால, அவங்க கிட்ட பணிவைத் தவிர, வேறு எதையும் காட்டிடக்கூடாதுங்கறது என்னோட பாலிசி.

எங்க கஸ்டமர்கள்
இந்தப் புக் சென்டர் நாலு தலைமுறையா நடந்துகிட்டு இருக்கு. நாலு தலைமுறைகளும் எங்களோட கஸ்டமர்கள். எங்களோட முதல் தலைமுறையோட வாரிசுகள்... அவர்களுக்கு வாரிசுகள்னு எல்லாருமே எங்களுக்கு கஸ்டமர்கள்.
என் அப்பா இறந்த பிறகு, நானும், என் மகனும் சேர்ந்து கடைய நடத்திகிட்டு இருக்கோம்" என்று ஈகிள் ஸ்டுடென்ட் புக் சென்டரின் வாடிக்கையாளர்களின் பெயரைப் பட்டியலிடுகிறார்.
"திருநெல்வேலியில இருக்கற டாக்டர்கள், அதிகாரிகள், சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ அப்துல் வஹாப், டெல்லி கணேஷ், தாமுனு நிறைய அரசியல்வாதிகள், பிரபலங்கள் எங்களோட கஸ்டமர்கள்.
ஸ்கூல் புக், டிரெண்டிங் புக்னு எல்லாத்தையும் நாங்க இங்க அப்டேட் பண்ணிடுவோம். காலை 8 மணிக்கு கடைய திறந்துடுவோம். நைட்டு 10.30 மணி வரைக்கும் கடை இருக்கும்.
ஒருவேளை கஸ்டமர்கள் கேக்கற புக் எங்க கிட்ட இல்லனா கூட, மூணு நாள்ல வாங்கிட்டு வந்துருவோம். அதை பெர்சனலா கஸ்டமர்கிட்ட தெரியப்படுத்திருவோம்".
இ-புக்ஸ் போட்டியா...
'இ-புக்ஸ் உங்கள் கடையைப் பாதித்ததா?' என்கிற கேள்விக்கு, "அது ஒரு பெரிய பாதிப்பா இல்லை. ஆனா, இதையும் ஒரு சேலென்சா நாங்க எடுத்துக்கிறோம்.
இப்போ எங்க கடைக்கு அதிகம் வர்றவங்களே டீனேஜர்ஸ் தான். பள்ளிகள்லயும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்க புத்தகங்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாங்க. இதெல்லாம் நல்ல விஷயம்... வரவேற்க வேண்டிய விஷயம்" என்று பதிலளிக்கிறார் சௌந்தர்ராஜ்.
"புத்தகங்களோட டிஸ்பிளேக்கு இடம் இல்லை. அதனால, இந்தக் கடையை இன்னும் ஒரு வருஷத்துல மூணு மாடி கட்டடமா மாத்தணும்ங்கறது எங்களோட எதிர்கால பிளான். இந்தத் தொழில்னு இல்ல... எந்தத் தொழிலா இருந்தாலும், எந்தவொரு கவனச்சிதறலும் இல்லாம, ஃபோக்கஸ்டா வேலை பார்த்தா கண்டிப்பா வெற்றி கதவை தட்டும்" என்கிற நம்பிக்கையோடு நமக்கு விடைக்கொடுக்கிறார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...