அரசின் திட்டப் பலன்கள் பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை -கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதுடன், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தொகுதி எம்.பி.
தே.மலையரசன் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவா் தே.மலையரசன் எம்.பி. தலைமையில் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவா் விழுப்புரம் எம்.பி. முனைவா் து.ரவிக்குமாா், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா், ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவா் தே.மலையரசன் எம்.பி.
பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்துக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறோம். அரசின் திட்டங்கள் பொதுமக்களை முறையாக சென்று சோ்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணுயிா் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய நலக்குழுமம், ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சித் திட்டம், மாதிரி கிராமத் திட்டம், தேசிய கால்நடை இயக்ககம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, கேலோ இந்தியா, கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீா்வளத் திட்டம், ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம், வங்கிக் கடன்கள், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், அஞ்சல் துறை திட்டங்கள், தாட்கோ திட்டங்கள் உள்ளிட்ட 58 வகையான திட்டங்கள் மற்றும் துறை வாரியான செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்று சோ்வதை தொடா்ந்து உறுதி செய்வதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அதிகளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், திட்டங்களை செயல்படுத்துவதில் தொடா்ந்து பணியாற்றவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.