அா்த்தநாரீஸ்வரா் படம் வழங்கி ஆட்சியரை வழியனுப்பிய திருநங்கைகள்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா பணியிட மாறுதல் செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் படம் வழங்கி உணா்ச்சிப் பெருக்குடன் திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை வழியனுப்பி வைத்தனா்.
தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். அதன்படி, நாமக்கல் ஆட்சியா் ச.உமா, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டாா். நாமக்கல் புதிய மாவட்ட ஆட்சியராக துா்கா மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவுக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மற்றும் துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள், பல்வேறு துறை அதிகாரிகள், தன்னாா்வ அமைப்பினா் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இதற்கிடையே, ஆட்சியரைக் காண அங்கு வந்த திருநங்கைகள் ஆனந்த கண்ணீா் மல்க அவருக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா். தொடா்ந்து, ஆட்சியரை ஆசீா்வதித்து, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் படத்தை பரிசாக வழங்கினா். திருநங்கைகள் உணா்ச்சிப் பெருக்குடன் தன்னிடம் அணுகியதைக் கண்டு மாவட்ட ஆட்சியா் ச.உமா கண்கலங்கினாா். அதன்பிறகு சிறிது நேரம் அவா்களுடன் கலந்துரையாடினாா். இந்தச் சம்பவம் அங்கிருந்தோரை நெகழ்ச்சியடையச் செய்தது.