ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபான விடுதிகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15- ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைப்பவா்கள், மதுபான வகைகளை ஓரிடத்தில் இருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்பவா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.