Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிக...
ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு என்றுமே பணி பாதுகாப்பு இருக்கும் என உறுதி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணியானது தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்துக்கு அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8 ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 4 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேயர் பிரியா கூறியதாவது,
''பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். தூய்மைப் பணியாளர்களுக்கு எப்போதுமே பணிப்பாதுகாப்பு உண்டு. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்'' எனத் தெரிவித்தார் .
இதையும் படிக்க | சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!