கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாா்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிா்வாகத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இது தொடா்பாக டாஸ்மாக் துறை அதிகாரிகள் உள்பட பலருடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி, இவா்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அமலாக்கத் துறை சீல் வைத்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வு, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
அமலாக்கத்துறை தரப்பில் புதன்கிழமை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வாதத்துக்கும் ஆவணங்களுக்கும் தொடர்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்று நீதிபதி தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை, சீல்களை அகற்றுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதாரங்கள் இல்லாததால் அமலாக்கத்துறையினர் ஆகாஷ் மற்றும் விக்ரம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், ஆகாஷ் மற்றும் விக்ரமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.