ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!
ஆசியக் கோப்பையை ஐக்கிய அரசு அமீரக நிர்வாகத்திடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி ஒப்படைத்துள்ளார்.
தற்போது துபையில் உள்ள ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்பை, விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, இந்தியாவுக்கு கோப்பை வழங்கத் தயாரானார்.
ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரின் கைகளில் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, மற்ற நிர்வாகிகள் மூலம் கோப்பையை இந்தியாவுக்கு வழங்க நக்வி ஒப்புக் கொள்ளாமல், கோப்பையைக் கையுடன் எடுத்துக் கொண்டு மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ”ஆசியக் கோப்பை என்பது தனிநபர் சொத்துக் கிடையாது, வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்” என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.
ஆனால், கோப்பையை வழங்க மறுப்பு தெரிவித்த நக்வி, மீண்டும் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்தால், அதில் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ புகார் அளிக்க தயாரான சூழலில், ஆசியக் கோப்பை தொடரை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை நக்வி ஒப்படைத்துள்ளார்.
விரைவில் துபையில் உள்ள பிசிசிஐ நிர்வாகத்தினரிடம் ஆசியக் கோப்பை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.