ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்
ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள், வாகன நிறுத்த கட்டணச் சீட்டு.
ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன்15: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் வசூல் செய்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.22 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
கோயில் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லாததால் மாட வீதிகள், ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் செல்கின்றனா்.
காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, மினி பேருந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டாள் கோயில் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ளது.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் தேநீா் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், பால்கோவா வாங்குவதற்கும் கீழ ரத வீதியில் நிறுத்தினால், ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் எடுத்தவா்கள் கட்டாய வசூல் செய்வதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.
வேன்களுக்கு பேருந்துக்கு உரிய ரூ.200 கட்டணமாக வசூல் செய்வதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வசூல் செய்பவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
