Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெ...
இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!
இணையதளம் மூலம், திருமணத்துக்கான வரன் தேடுபவர்களை, சைபர் குற்றவாளிகள் எளிதாகக் குறி வைத்து மோசடி செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண வரன்களைப் பற்றி ஒரு சமூக மக்களுக்கு என ஒரு முகவர் இருப்பார். அவர் பல்வேறு ஜாதகங்களை வைத்திருப்பார். வரன் தேடுபவர்கள், அவரிடம் தொடர்புகொண்டு பேசுவார்கள்.
இந்த நிலை இப்போது இல்லை. அவர்களது வேலையை செய்ய திருமணவரன் தேடும் இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒன்றிரண்டு இணையதளங்கள் இருந்தன. இப்போதோ, ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் என தனித்தனி டொமைன்களில் இணையதளங்கள் வந்துவிட்டன. அதற்கான விளம்பரங்களும் ஏராளம்.
ஆனால், இதுபோன்ற திருமண வரன் தேடும் இணையதளங்கள் மூலம் சில குடும்பங்களின் தகவல்களை அறிந்துகொண்டு, அவர்களை எளிதாக சைபர் குற்றவாளிகள் குறிவைப்பதாகவும், இணையதளங்களில் மணமகன் அல்லது மணமகள் வீட்டார் போல பதிவு செய்து, அவர்களிடம் பேசி பழங்கி, பணத்தைப் பறிப்பதை ஒரு கும்பல் வேலையாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், வரன் பார்க்கும் இணையதளங்கள் என்ற பெயரில் மோசடியாளர்களே சில இணையதளங்களை இயக்கி வருகிறார்களாம். எனவே, அதிகாரப்பூர்வ உறுதி செய்யப்பட்ட இணையதளங்கள்தானா என்பதை எப்போதும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
சில முன்னணி இணையதளங்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துகளை மாற்றி இந்த போலி இணையதளங்கள் செயல்படலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவு செய்வதற்கு என தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளலாம். இது ஒன்றை மட்டுமே தொடர்புகொள்ளும் வழியாக வைத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் முகவரி, தொலைபேசி எண்களை வழங்க வேண்டாம் இந்த தளங்களில்.
ஒருவேளை, அதில் வரும் வரன் பற்றி அறிய வேண்டும் என்றால், வேலை செய்யும் இடம், வீடு, குடும்பம், அவர்களது நண்பர்கள், அக்கம் பக்கம் வீட்டார் என அனைத்துத் தரப்பிலும் பேசி அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த இணையதளத்தில் எந்தெந்த தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவும்.
இணையதளம் வாயிலாக அறிமுகமான குடும்பத்தை சந்திப்பதாக இருந்தால் பொதுவிடத்தில் முதலில் சந்தியுங்கள். உங்கள் அல்லது அவர்கள் வீட்டில் வேண்டாம். இந்த சந்திப்பு குறித்து உங்களுடன் சந்திப்புக்கு வராதவர்களுக்கும் தெரிவித்து வையுங்கள். ஆபத்துக்கு உதவலாம்.
உங்களுக்கு நம்பிக்கை வரும் வரை, அவர்களுடன் எந்த தனிப்பட்ட தகவலையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
திருமணம் உறுதி செய்யப்படும்வரை, அவர்களுடன் புகைப்படங்களை பகிர்வது போன்றவற்றையும் தவிர்க்கலாம். திடீரென அவர்களிடமிருந்து வரும் பணத்தேவை தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்து விடுங்கள். இப்படித்தான் மோசடி ஆரம்பிக்கும்.
குறிப்பாக வெளிநாட்டில் மணமகன் இருப்பதாக வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருங்கள். ஏனென்றால், இதில் மோசடிக்கான வாய்ப்பு அதிகம். குடும்பத்தினர் நேரில் வராமல் மணமகன் வந்த பிறகு வருவதாகக் கூறி பேசத் தொடங்குவார்கள். இதில் ஆபத்துகளும் அதிகம்.
மோசடியாளர்களை அறிவது எப்படி?
வரன் குறித்து வெளியிட்டிருப்பவர்கள் நேரடியாக சந்திக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அவர்களது புகைப்படங்கள் தவறானதாகக் கூட இருக்கலாம்.
ஒருவரை தொடர்புகொண்டு பேசும்போதே, திருமணத்துக்கு ஒப்புக் கொள்வதைப் போல பேசுவார்கள். எந்த பெரிய கோரிக்கைகள், கேள்விகள் இருக்காது.
மோசடியாளர்கள் அவர்களேதான் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உங்களிடம் தொலைபேசி எண் இருந்தாலும் அழைத்தாலும் போனை எடுக்க மாட்டார்கள். அவர்கள் மீண்டும் வேறொரு எண்ணிலிருந்து அழைக்கலாம்.
ஆரம்பத்திலேயே சில நிதி தொடர்பான விஷயங்கள் பற்றி பேசத் தொடங்குவார்கள்.
சிலர், அவர்களைப் பற்றி அதிகம் பெருமைப் பேசிக் கொள்வார்கள்.
இவர்கள் வைத்திருக்கும் சமூக வலைத்தளக் கணக்குகள் அப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கும். அதில் ஏராளமான நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.