இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இதில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.
மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், சனிக்கிழமை இரவு தருமபுரியை வந்தடைந்தார்.
இதைத் தொடர்ந்து, நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் இருந்து தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி, பழைய குடியிருப்புப் பகுதி, அரசு கலைக் கல்லூரி வழியாக ‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையும் படிக்க: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!