கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
``இந்தியாவின் தேசிய மொழி எது?'' - எம்.பி கனிமொழி பதிலால் அரங்கம் அதிர கைதட்டிய குழு!
இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்றும் பா.ஜ.க தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா சமஸ்கிருதம்தான் நாட்டின் மூலமொழி என்று அவையிலேயே குறிப்பிட்டதும் சர்ச்சையானது.

இப்படியாக இந்தியாவின் தேசிய மொழி குறித்து பல்வேறு விவாதங்கள் வலம் வருகிறது. அதே நேரம் மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா. எனவே, பல்வேறு மொழிகள் இருக்கும் இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று இல்லை. அரசின் அலுவலக மொழிதான் இந்தியும் ஆங்கிலமும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு எனக் கூறிய இந்தியா மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இந்தியா.
அதைத் தொடர்ந்து, தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியாவின் சார்பில் எம்.பிக்கள் அடகிய தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய தூதுக்குழுவினர் கலந்துரையாடினர்.
அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.பி கனிமொழி, "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என பதிலளித்தார். இந்த பதிலுக்குப் பிறகு சில நிமிடங்கள் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.