அதிமுக: "இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை...’’ - ஸ்டாலின் கா...
இன்று கோவை, நீலகிரிக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 26) கோவை மற்றும் நீலகிரியில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
ஆரஞ்ச் எச்சரிக்கை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூன் 26) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை) - 80 மி.மீ., சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை), பாா்சன்ஸ்வேலி (நீலகிரி) - தலா 70 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே பதிவானது. எனினும் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே வியாழன், வெள்ளி (ஜூன் 26, 27) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப்ப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.