IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Impe...
இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் பெரிதாக பேசப்படாதது ஏன்? : ஓர் பயண அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பிப்ரவரி 14 ஆம் தேதி.
அன்பின் வெளிப்பாடாக சிகப்பு ரோஜாக்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்த ஒரு நகரின் மக்களால் மட்டும் ஏனோ அந்த மகிழ்ச்சியை மனதார ரசிக்க இயலவில்லை.
உலகமே இரண்டாம் உலக போரின் நினைவுகளிலிருந்து கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த நகரம் மட்டும் அதை மறக்காமல் இன்றும் அந்த கொடிய காலங்களிலேயே தன்னை சிறை வைத்து கொண்டிருக்கிறது.

எப்படி மறக்க முடியும்?
இத்தனை ஆண்டுகள் கடந்தும் அன்று நடந்த போரின் தாக்கம் இங்கே குறைந்தபாடில்லை. அன்று பெய்த குண்டு மழைகளின் ஈரம் இன்றும் காயவில்லை. ஆம், இப்பொழுதும் இந்நகரத்தில் தோண்ட தோண்ட வெடிகுண்டு கிடைத்த வண்ணமே உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் கூட ஒரு வெடிகுண்டை கண்டெடுத்துள்ளார்கள்.
அந்த இரண்டாம் உலக போரில் ஜப்பானில் அழிந்த ஹிரோஷிமா நாகசாக்கி பற்றி உலகம் அறிந்த அளவு இந்த நகரத்தை பற்றி யாரும் அறிந்ததில்லை.
ஆம், நாம் இன்று காணபோவது இரண்டாம் உலக போரில் தொலைந்து போன, தற்போதைய ஜெர்மனியில் உள்ள ட்ரெஸ்டன் (Dresden) நகரமே ஆகும்.
கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் தான் இந்த ட்ரெஸ்டன். பெர்லினுக்கு தெற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு இறங்கியதும் முதலில் என் கண்களைக் கவர்ந்தது Frauenkirche சர்ச் தான். இதை உள்ளூர் மக்கள் "அவர் லேடி" சர்ச் என்றும் அழைக்கிறார்கள்.
அதன் அழகிய கட்டமைப்பும், உயரும், நிறமும் கண்ணை கொள்ளை கொள்கிறது. அதன் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அதன் வரலாற்றை பற்றி அறிந்து பிரமிப்பு கொண்டேன்.
இன்று நாம் காணும் இந்த கண்கவர் தேவாலயம் இரண்டாம் உலகப் போரின் குண்டுவெடிப்பில் முற்றிலுமாக அழித்துவிட்ட ஓர் கட்டிடம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால், அது தான் உண்மை.

இரண்டாம் உலக போரில் ஆயிரத்திற்கும் மேலான விமானங்கள் கிட்டத்தட்ட 4000 டன் வெடிகுண்டுகளை மூன்றே நாட்களில் இந்த நகரத்தில் கொட்டி தீர்த்தது. அதில் கிளம்பிய தீப்பிழம்புகள் 1600 ஏக்கர் பரப்பளவை விழுங்கியது. 25,000 மக்கள் இறந்ததாக கணக்கு கூறப்படுகிறது. அப்பேரழிவில் இந்த தேவாலயம் மட்டும் என் செய்யும்?
அதுவும் முற்றிலுமாக அழிந்தது, மிஞ்சியது நீங்கள் கீழே காணும் சுவரின் ஒரு பகுதி மட்டுமே.
அப்படி அழிந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தைத்தான் இன்று தங்களின் தீவிர முயற்சியால் மீட்டெடுத்துள்ளார்கள் அந்நகரத்து மக்கள்.
இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் GDR-ன் [ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு] கீழ் இருந்தபோது, அவர்களால் இதை மீட்டெடுக்க முடியவில்லை, எனவே இந்த இடம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு நினைவுச்சின்னமாக அதே நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இன்றைய ஜெர்மனியுடன் இணைந்த பிறகு, பல விஷயங்கள் மாறத்தொடங்கின. புது நம்பிக்கை கொண்ட அந்நகர மக்கள் அனைவரும் இதை உயிர்ப்பித்து எழுப்ப நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடங்கினார்கள்.

தேவாலயத்தை புதுப்பிக்க மட்டுமின்றி, அன்று இழந்ததை அச்சுஅசலாக அப்படியே மீண்டும் உயிர்ப்பிக்க செய்யவேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதற்காக அவர்கள் கம்ப்யூட்டர் உதவியை நாடி, இக்கட்டிடங்களில் இருந்து சிதறி கிடந்த பழைய கற்களுக்கான சரியான இடங்களை தேர்ந்தேடுத்தார்கள். புனரமைக்கும் பொழுது அந்த பழைய கற்களை குண்டுவெடிப்புக்கு முன்பு இருந்த அதே இடங்களில் பொருத்தி 2005ம் ஆண்டு முழுவதுமாக முடித்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.
நீங்கள் கூர்ந்து கவனித்தால், புதிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்றும் அந்த பழைய சுவர் அப்படியே இருப்பது உங்களுக்கும் நன்கு புலப்படும். மேலே உள்ள புகைப்படத்தில் கருமை நிறத்திலுள்ள கற்கள் கொண்ட சுவர் தான் அவை. அதன் பழமையை பாதுகாக்கும் வண்ணம் அதை அப்படியே வைத்துள்ளார்கள்.

அவர்களின் அந்த முயற்சியினால் இன்று நாம் எந்த வித கட்டணமுமின்றி இந்த ஆலயத்தின் உள்ளே சென்று இதன் அழகை கண்டு ரசிக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த அலங்காரங்களை கண்டு சற்று மதி மயங்கி தான் போனேன். அவ்வளவு அழகு.
ஒரு சிறிய கட்டணம் கட்டி இந்த தேவாலயத்தின் மேலுள்ள கோபுரங்களுக்கு சென்று அந்த நகரத்தின் அழகையும் ரசிக்கலாம். மேலே இருந்து எல்பா நதியும் அதன் மேல் கடந்து செல்லும் மேம்பாலங்களும் காண்பதற்கு அருமையாக இருக்கும்.

மற்றோரு துணுக்கு செய்தி. நீங்கள் காணும் இந்த பாலம் நான் சில வருடங்களுக்கு முன் சென்றிருந்த பொழுது க்ளிக்கியது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் நான் சென்றிருந்த பொழுது இடிந்து இருந்தது. கடந்த ஜனவரி மாதம் இப்பாலம் விழுந்ததாகவும், அதை பராமரிக்கும் பணிக்காக தோண்டும் பொழுது மீண்டும் ஒரு வெடுகுண்டை இங்கு கண்டெடுத்ததாக கூறியபொழுது மேலும் ஓர் அதிர்ச்சி.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நகரங்களுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் நாம் பல புது புது விஷயங்களை கற்று கொள்வோம். அவ்வளவும் வரலாற்று பொக்கிஷம். ஆம், இம்முறை நான் யூதர்களும் அவரது கடைசி இடங்களில் பாதிக்கப்படும் பிளாக் (Plague) பற்றி தெரிந்து கொண்டேன்.
இது 1992ம் வருடம் ஒரு ஜெர்மனிய ஆர்டிஸ்ட்டால் துவங்கப்பட்டது இந்த வழக்கம். Concentration கேம்பில் நாசிகளின் (Nazi) கையில் பல்லாயிர கணக்கான யூதர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாம் அறிந்ததே.

அப்படி இறந்தவர்கள் கடைசியாக வாழ்ந்த இடங்களை கண்டறிந்து அங்கே அவர்கள் பெயரில் ஒரு கோல்ட் பிளேட் வைத்திருக்கிறார்கள்.
இங்கே நாம் காண்பது அப்படி கொல்லப்பட்ட நான்கு யூதர்களின் பெயர் பலகையே. இதில் அவர்கள் பிறந்த தினங்களும் கொல்லப்பட்ட தினங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இது போன்ற வரலாற்று துணுக்குகள் நீங்கள் வலைத்தளங்களில் தேடினாலேயே கிடைத்து விடும். ஆனால், நீங்கள் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம், அந்த போரின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த மக்களின் வாரிசுகளிடம் உரையாடுவது. பெர்லின் சுவர் வீழ்ந்த பொழுது அங்கிருந்த மக்களின் நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்வது. அதுவே ஒரு பயணத்தின் தனிச்சிறப்பு.
அதுமட்டுமல்ல, நம்மூரை போலவே அங்கும் பல மண் சார்ந்த கதைகள் உண்டு. அது உண்மையா இல்லை வெறும் கட்டுக்கதையா என்று ஆராய்வதை விட்டு அதிலுள்ள நல்ல விஷயங்களையும் உணர்ச்சிகளையும் அனுபவிப்பதே ஒரு பயணத்தின் பேரானந்தம்.
அதுபோன்ற மண்ணின் கதைகளை அங்கேயே அல்லும் பகலும் வசிக்கும் மக்களை விட வேறு யாரால் துல்லியமாக வர்ணிக்க இயலும்? எனவே தான் நான் எங்கு பயணம் செய்தாலும் அங்கு வசிக்கும் மக்களிடம் நேரடியாக பேச முயல்வது உண்டு.

பெரும்பாலும் அம்மக்கள், தங்கள் நகரத்தை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வினையும்பொழுது பெருமை கொண்டு அனுபவங்களை பகிர முற்படுவார்கள்.
அப்படி நான் சந்தித்த ஒருவர் தான், டிரெஸ்டனில் பிறந்து வளர்ந்த தாமஸ் என்ற அந்த மனிதர். அவர் பேச்சிலேயே தன் நகரத்தின் பெருமை புலப்படுகிறது.
அக்காலங்களில், GDR-ஐ (German Democratic Republic) ஆட்சி புரிந்தது ஒரு கம்யூனிச அரசு. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளின் பொருளாதார தடை இருந்த காரணத்தால், பல நாடுகள் அன்று அவர்களுக்கு மா, பலா, வாழை போன்ற சாதாரண கனிகள் கூட ஏற்றுமதி செய்ய மறுத்த காலம்.

எனவே அந்நாளில், எந்த கடையிலாவது "வாழைப்பழம்" விற்பதாக தகவல் தெரிந்தால் அது எப்படி அவர்களின் நகரத்தில் காட்டுத்தீ போல் பரவியது என்பது பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் தாமஸ். ஒரு சில நிமிடங்களிலேயே, அது விற்று தீர்ந்து விடும் என்றும், அடுத்த சரக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறினார்!
ஆம், அவர்களுக்கு இதை வழங்கிய ஒரே நாடு அன்றைய கியூபா தான்.
எனவே, அவரது சிறுவயதில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தருணங்களில், அவர் தனது குடும்பத்தினருடன் முதல்முதலில் பெர்லினுக்குச் சென்றதை சந்தோசத்துடன் பகிர்ந்தார். நான் கூட, அது ஏதோ அவர்களது சொந்தங்களை சந்திப்பதற்காக என்று எண்ணினேன். பிறகு தான் தெரிந்தது, அதைவிட மிக முக்கியமாக நிறைய வாழைப்பழங்களை வாங்குவதற்காக சென்றதாக அவர் கூறியபோது சுற்றி இருந்த அனைவரும் சிரித்தது நன்கு நினைவிருக்கிறது!
ஒரு முறை இங்கே ஒரு ஹோட்டலில் exotic ஜூஸ் என்று ஒன்றை மெனு கார்டில் பார்த்து ஆர்வத்துடன் ஆர்டர் செய்து காத்திருந்தேன். அப்படி என்ன exotic என்று.
வந்த பின் தான் தெரிந்தது அது நம்மூர் மேங்கோ ஜூஸ் என்று!!!
அதற்கு அர்த்தம் தாமஸ் கூறிய பின் தான் நான் உணர்ந்தேன்.

அந்த மனிதர் பகிர்ந்து கொண்ட மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், கிங் அகஸ்டோ II வின் கட்டைவிரலின் சக்தி பற்றியது.
அப்போது, இது உண்மையா என்று நான் அவரிடம் கேட்டபோது, தன்னிச்சையான அவர் கூறியது "எனக்குத் தெரியாது. ஆனால் இது தலைமுறை தலைமுறையாக வாய்வழியே கடத்தப்படும் ஒரு கதை." என்பது மட்டுமே.
என் அன்பு வாசகர்களே, அந்த கதையின் நம்பகத்தன்மையை ஆராய எனக்கு மனமில்லை. அது ஒரு கட்டுக்கதையாகவே இருக்கட்டும், ஆனால் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, எனவே இங்கே அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
அது என்னவென்றால், நான் கூறிய வரலாற்று சிறப்புமிக்க “அவர் லேடி” சர்ச்சுக்கு மிக அருகில் Bruehi’s Terrace என்று ஒரு இடம் உள்ளது. ஒரு பழைய கோட்டைச் சுவர்களுக்கு மேல் உள்ள அதில் நீங்கள் நடக்கும் பொழுது ஒரு சில இரும்புத் வேலிகளை காண நேரிடும்.

இந்த இரும்பு வேலிகளின் ஓர் இடத்தில ஒரு பெரிய கட்டைவிரல் அளவிற்கு நசுங்கி இருக்கும். விஷயம் என்னவென்றால், ஒரு நாள் இரண்டாம் அகஸ்டோ மன்னர், இந்த இரும்பு வேலியின் அருகே நின்று எல்பா நதியை ரசித்து கொண்டிருந்ததாகவும், தனது சக்தியை சுற்றியிருந்த நண்பர்களிடம் வெளிப்படுத்த அவர் வேலியின் கம்பிகளை அழுத்தியதாகவும் அது தான் இன்றும் அந்த இரும்பு வேலிகளில் அவரது கட்டைவிரலின் அடையாளத்தைக் காண்பதாகவும் ஒரு பேச்சு உண்டு.
நான் முன்பே குறிப்பிட்டது போல, இது கட்டுக்கதையா அல்லது உண்மைக்கதையா என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மண்ணின் மக்களுக்குள்ளும் இது போன்ற பல கட்டுக்கதைகள் நிரம்பி வழிவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பல சுவாரசியமான தகவலுக்கு நீங்ககளும் எங்கு சென்றாலும் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் பேச்சு கொடுங்கள். அவர்கள் அள்ளி வழங்கும் வரலாற்று பொக்கிஷத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.