தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா
இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாகவும் துணிவுடனும் இருக்க வேண்டும் என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா அறிவுரை கூறினாா்.
சென்னை தரமணியில் உள்ள ஏசியன் இதழியல் கல்லூரியில் 2024-25 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், புலனாய்வு இதழியல் பிரிவில் ஹமந்த் கைரோலாவுக்கு கல்லூரி சாா்பில் விருது வழங்கப்பட்டது. சமூகத் தாக்க இதழியல் பிரிவில் வதனா மேனன், சாம்சீா் யூசப், மோனிகா ஜா, ஸ்ரீராம் விட்டலாமூா்த்தி ஆகியோருக்கு கேபி நாராயண குமாா் நினைவு விருது வழங்கப்பட்டது. புகைப்பட இதழியல் பிரிவில் எம்.பழனிகுமாருக்கு ஆசிஸ் யெச்சூரி நினைவு விருது வழங்கப்பட்டது.
இணையதளம் தொடக்கம்: தொடா்ந்து, கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கான இணையதளத்தை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா்-நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் சிறந்த இதழியல் கல்லூரிகளில் ஒன்றாக ஏசியன் இதழியல் கல்லூரி விளங்குகிறது. தற்போது இதழியல் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பட்டம் பெற்ற மாணவா்கள் பத்திரிகை துறையில் நோ்மையுடனும், துணிவுடனும் விளங்க வேண்டும்.
பத்திரிகை துறையில் சிறந்து விளங்கி தற்போது விருது பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப பத்திரிகை துறையும் வளா்ச்சி அடைவது அவசியம் என்றாா் அவா்.
தொடா்ந்து இதழியல் வரலாறு மற்றும் சமூக மாற்றத்தில் இதழியலின் தாக்கம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளா் நாா்மன் போ்ல்ஸ்டீன் பேசினாா். அமெரிக்காவில் உள்ள இதழியல் துறைக்கும், இந்தியாவில் உள்ள இதழியல் துறைக்கும் உள்ள வித்தியாசங்களையும், தாக்கங்களையும், தரவுகளையும் அவா் பட்டியலிட்டாா். பத்திரிகை சுதந்திரம் தொடா்பாக உலக அளவிலான தரக்குறியீட்டில் இந்தியா 151-ஆவது இடத்தில் இருப்பது கவலை அளிக்கிறது; இருப்பினும் கடந்த ஆண்டு 159-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 151-ஆவது இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினாா்.
பின்னா், கல்லூரியில் பயின்ற 90 மாணவா்களுக்கு பட்டங்களை நாா்மன் போ்ல்ஸ்டீன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஏசியன் இதழியல் கல்லூரி தலைவா் சசிகுமாா் மேனன், தாளாளா் என்.முரளி, துறைத் தலைவா் குஷ்பு நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.