தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: தோனி
ஆர்சிபிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற போட்டிக்கு தான் பொறுப்பேற்பதாக தோனி கூறியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213/5 ரன்கள் எடுத்தது.
கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் 33 ரன்களை ஆர்சிபி அணியின் ரொமாரியோ ஷெப்பர்டு விளாசினார்.
அடுத்ததாக விளையாடிய சிஸ்கே அணி 20 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது.
இது குறித்து தோனி பேசியதாவது:
நான் பேட்டிங் விளையாட செல்லும்போது தேவைப்பட்ட ரன்களுக்கும் எனக்குக் கிடைத்த பந்துகளையும் வைத்து சொல்வதனால் நான் இன்னும் சில ஷாட்டுகளை அடித்து அழுத்ததைக் குறைத்திருக்க வேண்டும். இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
யார்க்கர் பந்துகளை அடிப்பது கடினம். ரேம்ப் அல்லது பேடில் ஷாட்டுகளை அடிக்கலாம். ஆனால், அது எல்லாருக்கும் வசதியான ஷாட்டாக இருக்காது.
நவீன காலத்தில் பேட்டர்கள் இதற்கு தயாராக வேண்டும். ஆனால், எங்களது பேட்டர்கள் அதற்கு பழக்கப்படவில்லை. ஜடேஜாவில் அதைச் செய்ய முடியும். ஆனால், அவரும் தனது பலமான நேராக அடிப்பதையே தேர்வு செய்தார். இன்று பேட்டிங் நன்றாக ஆடினோம் என்றார்.