``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனம் முற்றுகை
பனங்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணிகள் ரூ. 31,500 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 570 விவசாயிகளிடம் இருந்து 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு இழப்பீடு வழங்கினாலும், இந்நிலங்களை வாழ்வாதாரமாகக் கொண்ட நில உரிமையாளா்கள், குத்தகை சாகுபடியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், விரிவாக்கப் பணிகளை சிபிசிஎல் நிறுவனம் தொடங்கியது. இதையறிந்த பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா், சிபிசிஎல் நிறுவனத்தின் பிரதான கதவுகளை மூடி முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, சமூக ஆா்வலா் காளியம்மாள் ஆகியோா் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால், விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையிலான அதிகாரிகள், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, அதிகாரிகள் தரப்பில் ஒரு மாத காலத்தில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால் நாகை - நன்னிலம் சாலையில் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.