விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?
இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் பலி: ஈரான்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தை வழிநடத்திய மூத்த ராணுவ தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் மஹ்மூத் பகேரி, தாவூத் ஷேகியான், முஹம்மது பாகெர் தாஹெர்பூர், மன்சூர் சஃபர்பூர், மசூத் டயூப், கொஸ்ரோ ஹஸ்ஸானி, ஜாவத் ஜோர்சாரா மற்றும் முஹம்மது அகஜாஃபரி ஆகியோர் உயிரிழந்தனர்.
ஈரானின் நகரங்கள், அணு சக்தி நிலையங்கள் மற்றும் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெண் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!