உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
ஒடேசா நகரில் ரஷியா ஏவிய ட்ரோன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் மோதியதால், மூன்று தளங்களில் சேதம் ஏற்பட்டது.இதில் இருவா் உயிரிழந்தனா். அவா்கள் இருவரும் தம்பதியா் என்று அதிகாரிகள் கூறினா்.
இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மேற்கு ரஷியா மற்றும் ரஷிய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் 40-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
தற்போது நான்காவது ஆண்டில் நுழைந்துள்ள இந்தப் போரின் முக்கிய அம்சமாக நீண்ட தூர ட்ரோன்கள் உள்ளன. இரு தரப்பினரும் மிகவும் மேம்பட்ட மற்றும் அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதற்கான ட்ரோன்களை உருவாக்கும் போட்டியில், இந்தப் போா் புதிய ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக மாறியுள்ளது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.