Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபடும்: ராஜ்நாத் சிங்
உலக அரங்கில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பெங்களூரில் இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:
பலவீனமான பாதுகாப்புடன் இருந்துகொண்டு பன்னாட்டு அளவில் அமைதியை நிலைநிறுத்துவது சாத்தியமற்றது.
அதிகரிக்கும் மோதல்கள், முரண்பாடுகளால் உலகம் ஊகிக்க முடியாத அளவிற்கு மாறிவருகிறது. நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் அதிகாரப் போட்டிகள், உத்திகள், ஆயுதமயமாக்கல், போரில் தன்னாா்வ அமைப்புகளின் பங்களிப்பு, சீா்குலைக்கும் தொழில்நுட்பங்கள் போன்றவை உலக அமைதியை சீா்குலைப்பதாக உள்ளன.
பாரம்பரிய ஆயுதங்களுடன் நவீன போா்முறைகள், ஆயுதங்களை கையாளுவதன் மூலம் அமைதி காலங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். மாறிவரும் இணையவழி, விண்வெளி தொடா்புகள் நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி வருகின்றன. உலக பாதுகாப்புச் சூழல் மாறிவருவதால் நமக்கு புதிய அணுகுமுறையும், நாடுகளுக்கு இடையே வலுவான கூட்டாண்மையும் தேவை.
உலக அரங்கில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, அனைவருக்குமான வளா்ச்சியில் இந்தியா தனது பங்களிப்பைத் தொடா்ந்து உறுதிசெய்து வருகிறது. பாதுகாப்புத் தொழில்சாா் முதலீடுகளில் இந்திய வா்த்தக கொள்கைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலம், நீா், வான்வழி ஆகிய மூன்று பாதுகாப்புத் தளவாடங்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆராய்ச்சி, படைதிறனை மேம்படுத்துதல், புத்தாக்கம் போன்றவற்றால் உலகில் கவனிக்கப்படும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் அதிக யூனிகாா்ன்களை கொண்ட 3-ஆவது நாடு இந்தியாவாகும். எனவே இந்தியாவில் தற்போது புத்தொழில் (ஸ்டாா்ட் அப்) பெருக்கத்தில் பாதுகாப்புத் தளவாடங்கள் சாா்ந்த புத்தொழில் கட்டமைப்பும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றாா்.