மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை 43 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர்.
இன்று மாகி பௌா்ணமி என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவில் மாகி பௌா்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.
இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனா். பிரயாக்ராஜ் நோக்கிய பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ.-க்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது.
மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து, கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் நகர பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளா பகுதியில் பல்வேறு படித்துறைகளில் புனித நீராட இருக்கும் கோடிக்கணக்கான பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் இதுவரை 46.25 மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகி பௌா்ணமி என்பதால், இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!