உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்!: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுடன் கரம் கோத்து நிற்கும். உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் மே 1 ஆம் நாள் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் என பல நாடுகள் இந்நாளை கொண்டாடி வந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, இந்நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், உழைக்கும் மக்களை என்றும் போற்றும், மதிக்கும் தமிழ்நாட்டில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தமிழ்நாடு அரசால், பொதுவிடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உழைப்பாளர் நாள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “மே 1 உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள். உலக உழைப்பாளர் நாளான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.
உழைப்பாளர் நாளில் ஊதியத்தோடு விடுமுறை - மே நாள் பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.
மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உழைப்பாளர் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில், முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட ‘மே நாள் பூங்காவில்’, உரிமைக்காக போராடிய உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மே நாள் நினைவுத்தூண் அருகே மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்வழி, உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுடன் கரம் கோத்து நிற்கும்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்! உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! வெல்லட்டும்! என தெரிவித்துள்ளார்.