மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக த...
ஊட்டியில் மீண்டும் கனமழை, அடுத்தடுத்து விழும் மரங்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரம் பெய்த அந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.

அவலாஞ்சி, அப்பர் பவானி, பார்சன்ஸ் வேலி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமார் 300 மில்லிமீட்டர் மழைப்பொழிவு காணப்பட்டது. அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. காற்றின் வேகம் மற்றும் மழையின் தீவிரம் காரணமாக பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையிலும் குடியிருப்பு பகுதிகளிலும் முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
சீரமைப்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு நிலைமையை சீர்செய்து வந்தனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை மழைப்பொழிவு குறைவு என்றாலும், நேற்று மதியம் முதல் மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக சில இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மீட்பு மையங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். மழையின் தீவிரம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மரங்கள் முறிந்து விடுவதால் மின்விநியோகம் தடைப்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. அந்நிய மரங்கள் மற்றும் மண்சரிவால் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க பேரிடர் மீட்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.