இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்றியது! - நடுங்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 4
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
முதல் நாளே AMS (மலை நோய்) தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என நான் சொல்ல, “விட்டா ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்துட்டு வரச் சொல்லுவ போல, வெளியே கொஞ்ச நேரம் நடந்தா எல்லாம் சரி ஆகிடும்” என நவீன் விளையாட்டாக அதட்ட. அழுவதைப் போன்றதொரு பாவனையைச் செய்துவிட்டு, திரும்பப் படுத்துக் கொண்டேன். வலி நிவாரண மாத்திரியை மட்டும் போட்டுக்கொண்டு, இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.
குளிருக்கு இதமாக தீ மூட்டி, அதைச் சுற்றி நாங்கள் அமரும் வகையில் நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். அருகில் அமர்ந்திருந்த ப்ரீத்திக்கு அத்தனை சரளமாக ஆங்கிலம் பேச வராது. எனக்கோ இந்தி தெரியாது. ஆனால் நாங்கள் முதல் நாளிலேயே நண்பர்களாகிவிட்டோம். எங்களுக்குள் பேசிக்கொள்வதற்கும் நிறையவே இருந்தது, அதற்கு மொழி ஒரு தடையாகவே இருக்கவில்லை.

வெகு நேரமாகியும் யாரும் அங்கிருந்து நகரவேயில்லை. தூக்கம் வரவில்லையென்றாலும் அடுத்த நாள் பயணத்திற்குத் தெம்பு வேண்டும். அதற்கு ஓய்வு தேவை எனப்பட்டது. அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு எங்கள் கூடரத்த்திற்குள் வந்தோம்.
இரண்டு லேயர்கள் கொண்ட கூடாரம். கனமான தார்ப்பாய் கொண்டு போடப்பட்டிருந்தது. பலத்த காற்றையும், மழையையும் தாங்கும் வண்ணம் பெரிய ஆணிகளை அடித்து இழுத்துக் கட்டியிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல அணியினரது பேச்சு சத்தம் அடங்கிப் போயின, நதியின் சலசலப்பு மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவில் அவ்வப்போது முழிப்பு வந்து எழுந்த போது, கூடாரத் திரைச்சீலையை இலேசாக விலக்கிப் பார்த்தேன். நிசப்தமான அந்தப் பிரதேசத்தை நதி நீரின் பாய்ச்சல் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்தது.

காலை ஆறரை மணிக்கு ஒலிக்கும் வகையில் கைப்பேசியில் அலாரம் வைத்திருந்தேன். விழித்தெழுந்தபோது, இரவு இருந்த தலைவலி எல்லாம் காணாமல் போயிருந்தது. கூடாரத்தைத் திறந்தால் தான் குளிர் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னொரு கோட்டையும் எடுத்துப் போர்த்திக்கொண்டு வெளியே சென்று பார்த்தால் யாருமே எழுந்திருக்கவில்லை. அந்த இடத்தின் காப்பாளர்கள் உட்பட அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ப்ரீத்தி எழுத்திருந்தாள்.
அவளிடம் இன்றைக்கு எத்தனை லேயர் அணிய வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு வந்தேன். அப்போதும் யாரும் எழுந்த பாடில்லை. கைப்பேசியில் தட்ப நிலையைப் பார்த்தபோது, குளிர் இரண்டு டிகிரி எனக் காட்டியது. திரும்பவும் சென்று தூங்கவும் மனமில்லை. நிச்சயம் மீண்டும் இங்கு வர வேண்டும் என நினைத்துக்கொண்டே எதிரில் இருந்த மலைகளை அண்ணாந்து பார்த்தபடி இருந்தேன். அப்போது தான் பைனாகுலர்ஸ் எடுத்து வந்திருந்தது நினைவிற்கு வந்தது. உடனே ஓடிச்சென்று அதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து பார்த்தேன்.

நவீனும் அப்போது எழுந்து அன்றைய நாளுக்கானவற்றை எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். இருவரும் தொலைநோக்கியின் மூலம் அருகில் இருந்த மலை முகடுகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அருண் வந்தார். அப்போது தான் அணியினர் ஒருவருக்கொருவருடன் நன்கு பேசி அறிமுகமாகத் தொடங்கியிருந்தோம். அன்றைய பயணத்தில் கடக்கப் போகும் இடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
ஏழரை மணிபோல ஒவ்வொருவராக எழுந்து வரத் தொடங்கினார்கள். சமையலறையைத் திறந்து, உதவியாளர் தேநீர் தயார் செய்து கொடுத்தார். கோப்பையை கையில் வாங்கும் போது இருந்த சூடு, முதல் பருகலின் போது இல்லை. மேற்கொண்டு அது குளிர்பானமாக ஆவதற்கு முன் அதைக் குடித்துவிட்டு. ஒரு வாளியில் வெந்நீர் பிடித்துக் கொண்டு வந்தோம். இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது குளித்தால் தான் உண்டு.
உணவருந்தும் அறையில் பெரிய அளவிலான ஸ்பீக்கர்களை வைத்து ‘ ஹாரா ஹர சம்போ ‘ பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். கிட்டத்தட்ட அங்கிருந்த அனைவருமே அப்பாடலை முணுமுணுபதை பார்த்தபோது, அது அங்கு ட்ரெண்டான பாடலாக இருக்கவேண்டும் எனப் புரிந்துகொண்டோம். எங்களுக்குப் பசியில்லை ஆனால், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சம்பிரதாயமாகச் சில ரொட்டி துண்டுகளையும் ஆலு பாரத்தாவையும் உண்டுவிட்டுக் கிளம்பினோம்.
இன்றைக்கும் வார்ம் அப் இருக்கும். நீங்கள் உங்களது பைகளைக் கொண்டு வந்து வேன் ஓட்டுநரிடம் கொடுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பலாம். இன்று நாம் போகும் தடத்தில் ஜிங் ஜிங் பார் மலைப் பகுதிகள் வரும். அதைக் கடந்தால் தீபக் தால், சுரஜ் தால் போன்ற ஏரிகள் இருக்கும்.

இன்று இரவு தான் நம் அனைவருக்கும் சவாலாக இருக்கப்போகிறது. மொத்தப் பயணத்திலேயே இன்று தங்கப் போவது தான் உயரமான இடம். நீங்கள் இன்றைக்கு கேம்ப் சைட்டை அடைந்ததும், நீங்கள் ஏற்கனவே எத்தனை லேயர் அணிந்திருந்தாலும் கூடுதலாக ஒரு லேயர் குளிர் தாங்கும் உடுப்பை உடுத்திக்கொள்ள வேண்டும்.
உங்கள் பூட்ஸை கழட்டியதும் இரண்டு லேயர் காலுறைகளையும், ஹெல்மெட்டை கழட்டியதும் தலைக்குத் தொப்பி அல்லது குல்லாவை உடனே அணிந்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடங்கள் கூட தாமதிக்கக் கூடாது. காதுகள் குளிர் காற்று படாமல் நன்றாக மூடியிருக்க வேண்டும், என சஷாங்க் சொல்லிக்கொண்டிருக்கும் போது, நவீன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து திரும்பினேன்.
“கேட்டியா, இன்னைக்கு தான் சேலன்ஜிங்கா இருக்குமாம். நீ நேத்தே அவ்ளோ சீன் போட்டியே, இன்னைக்கு என்னவெல்லாம் நடக்க போகுதோ என்று கைகளை உயர்த்தி வானத்தைப் பார்க்க, “அடிவாங்கப்போற” என்று நான் கைகளை நீட்டி நவீனின் சட்டையைப் பிடிக்க முயல, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ப்ரீத்தி, “என்ன நடக்கிறது” என்றவாறே எனதருகில் வந்தாள். என்னுடைய அந்த நொடிப்பொழுது கவனச் சிதறல், நவீன் அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.
அன்றைய தினப் பயணத்தின் போது, தீபக் ஏரியின் அருகில் பைக்குகளை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். பன்னிரண்டாயிரத்து முந்நூறு அடி உயரத்தில், மலைகள் பின்புலமாக அமைத்திருக்க மரகதப் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தது தீபக் ஏரி. அளவில் மிகச் சிறியது தான் என்றாலும், தெளிவான நீர் நிலை. அப்பகுதியைக் கடப்பவர்கள் சிறிது நேரமாவது அங்கே நிறுத்தாமல் செல்லமாட்டார்கள்.

ஏரிக்கு அருகேயிருந்த ஒரு சிறிய உணவுக் கடைக்குச் சென்ற சஷாங்க் இங்கே பர்கர் மிகச் சுவையாக இருக்கும் எனச் சொல்லவும் அணியினர் தாமதிக்காமல் வரிசை கட்டிவிட்டனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், மதிய உணவுக்காக ஒரு சாலையோர தாபாவில் நின்றோம். அங்கே தால் சாவல், மேகி நூட்ல்ஸ் போன்றவை தான் இருந்தன. கடந்த பத்து வருடங்களில் மலைப் பிரதேசங்களும் மேகி நூடில்சும் பிரிக்க முடியாத இணையாக மாறிப்போயிருந்தன. அன்றைக்கு “தோ மசாலா மேகி” எனச் சொல்லும் போது, இனி பயணம் முடியும் வரை தினமும் மதிய உணவாக மேகியை தான் உண்ணப்போகிறோம் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.
மாலை ஐந்தரை மணியளவில் அன்றைய தங்கும் இடமான சார்சுவை அடைந்தோம். சஷாங்க், நாங்கள் தங்கவிருந்த கூடாரத்திற்குச் செல்லாமல், அதற்கு எதிரில் பரந்து விரிந்திருந்த வெட்டவெளியை நோக்கி அவரது பைக்கை செலுத்தினார். நாங்கள் எதுவும் புரியாமல் எங்களது பைக்குகளை அவருக்கு அருகில் சென்று நிறுத்தினோம். எதிரே தெரியும் கூடாரம் தான் இன்று உங்களுடைய வீடு. மலைத் தொடர்கள் பின் தெரிய இருக்கும் இந்த வெட்டவெளி, புகைப்படங்கள் வீடியோக்கள் எடுப்பதற்கு மிகச் சிறந்த இடம். சிறிது நேரம் உங்கள் விருப்பப்படி இங்கே இருந்துவிட்டு பிறகு செல்லலாம் என்றார்.

அடுத்த இருபது நிமிடங்களுக்கு விதவிதமான போஸ்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, யார் அதிவேகத்தில் பைக்கை செலுத்துகிறார்கள் எனப் பந்தயம் வைத்து அந்த இடமே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்து அணியினரைக் கிட்டத்தட்டக் கட்டாயப்படுத்தித் தான் சஷாங்க் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அப்போதே இருள் சூழ தொடங்கியிருந்தது.
இன்று அதிகபட்சமான குளிர் எதிர்பார்க்கப்படுவதால், இரவு உணவிற்குப் பின் கேம்ப் பையர் இல்லை. சாப்பிட்டு விட்டு அவரவர்களது கூடாரங்களுக்குச் சென்றுவிடவேண்டும் என்றார்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்திற்குள் வந்ததும் இருப்பதிலேயே தடிமனான மேற்சட்டையைப் போட்டுக்கொண்டேன். முதல் அரை மணி நேரம் எதுவும் தெரியவில்லை. பயணக் களைப்பு மட்டும் இருந்தது. சிறிது நேரத்தில் குளிர் அதிகமாகவும், நான்கு-ஐந்து லேயர் ஆடைகளுடன் அங்கிருந்த கம்பளியையும் எடுத்துப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
என்னுடைய ஆறு அடுக்கு லேயர்களையும் தாண்டிக் குளிர் ஊடுருவி நெஞ்சைத் தாக்கியது. உள்ளூர ஏற்படும் நடுக்கம் எனச் சொல்வார்களே, அதை நான் அன்று வாழ்வில் முதல் முறை உணர்ந்தேன். மலை காற்று சுழன்று சுழன்று அடித்தது. அத்தனை பெரிய கூடாரம் கூட ஆட்டம் கண்டது. தார்ப்பாய் துணிகள் காற்றில் மோதி படபடத்த சத்தம், என் நடுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அந்த நிலைமையில் என்னால் உண்பதற்கு கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முடியும் எனத் தோன்றவில்லை. அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டேன். இத்தனைக்கும் அப்போது மணி ஏழு- ஏழரை தான் இருக்கும்.

எட்டு மணியளவில் உணவு தயாராகி விட்டதாக வந்து அழைத்து விட்டுப் போனார்கள். நான் மறுத்தும், நவீன் என்னை விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். மனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். எனக்கு உள்ளே இருந்த அளவிற்கு வெளியே நடுக்கம் ஏற்படவில்லை. குளிர் இல்லாமல் இல்லை, ஆனால் இங்கு பரவாயில்லை என்பதைப் போல இருந்தது.
எங்கள் கூடாரத்திற்கு எதிரே தான் உணவு தயாரிக்கும் கூடாரம் இருந்தது. அங்குச் சாப்பிடுவதற்குக் கூட கையுறைகளைக் கழற்ற முடியவில்லை. கைகளில் ரத்தம் பாய்வதையே உணர முடியாத அளவிற்கு விரல்களும், உள்ளங்கைகளும் உறைந்து போயிருந்தன. ஒரே ஒரு சப்பாத்தியை மட்டும் தான் சப்பிட முடிந்தது.
இப்போதும் எடுத்த வந்திருந்த வெந்நீர் சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. வந்த வேகத்தில் அத்தனை கம்பளிகளையும் சுற்றிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்துகொண்டேன். இங்கு எப்படி இவர்கள் தங்கி இருக்கிறார்கள். தினமும் இங்கு வருபவர்களுக்குச் சமைத்துப் போட்டு எப்படி வாழ்கிறார்கள். முதலில் இப்படிப் பட்ட ஓரிடத்தில் எதற்காகத் தங்குமிடம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் அசதியில் நவீன் தூங்கிவிட, நான் தூக்கம் வராமல் அல்லாடிக் கொண்டிருந்தேன். உடல் சோர்வாக இருந்தது ஆனால் தூக்கம் வரவில்லை. கனவிற்கும் நினைவிருக்கும் இடையில் ஒரு போராட்டமாக அந்த இரவு இருந்தது. என்னால் எது கனவு, எது நிஜம் என்று வித்தியாசப்படுத்தமுடியவில்லை. பேசுவதைப் போலக் கனவு காண்கிறோமா, இல்லை நிஜத்தில் உளறிக்கொண்டிருக்கிறேனா என்பதும் புரியவில்லை. ஒரு கட்டத்தில் இது நிச்சயம் AMS தான், நாம் இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்ற ஆரம்பித்துவிட்டது.
AMS என்பது உடல் நிலையை மட்டும் மோசமாக்காது, மனத்தையும் தாக்கும். ஒரு கட்டத்தில் என் உடலை அது ஒன்றும் செய்யவில்லை மனத்தைத் தான் குழப்புகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது எனக்கு அத்தனை குளிர் எடுக்கவில்லை. அப்படி நான் புரிந்து கொண்டது நிஜம்தானா என்பதும் தெளிவாக இல்லை. நடுவில் என் கணவர் எழுந்து எனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டது மட்டும் ஞாபகம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, சஷாங்க் அனைவரது கூடாரங்களையும் தட்டி, நாங்கள் நல்ல நிலைமையில் (உயிருடன்) இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். சிலருக்கு உடல் நடுக்கம், தூங்கமுடியவில்லை என்பதை தவிர பெரிதாக யாருக்கும் தொந்தரவு இல்லை. தானிஷ் என்பவருக்கு மட்டும் தலைவலி தீவிரமாகயிருந்ததால், diamox மாத்திரையை எடுக்க வேண்டியதிருந்தது.
இரவிலிருந்து அங்கு மின்சாரமோ தண்ணீரோ இல்லை. வெளியில் ஒரு பொது இடத்தில் வாளியில் தான் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர வேண்டும். அன்றைக்குக் குளிப்பதை விடுங்கள் தண்ணீரை கையால் தொட்டுப் பார்ப்பதைக் கூட யோசிக்கமுடியாது. எப்படியோ காலைக் கடன்களை முடித்து பல் தேய்த்து, முகம் கழுவி தயாரானோம். உதடுகள் வெடித்து காயம் ஆகாத குறை தான். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை லிப் பாம் (lip balm) போட்டே ஆக வேண்டும். இல்லை என்றால் உதட்டுத் தோல் வெடித்து, மேலும் காயம் ஆகி ரத்தம் வந்து விடும்.
சார்சுவில் நாங்கள் தங்கியிருந்த கேம்ப் சைட்டில் வேறொரு பயணக்குழு தங்கியிருப்பதைக் காலையில் தான் உணர்ந்தேன். முதல் நாள் இரவிலேயே உணவு உண்ணும் இடம் கூட்டமாக இருந்தது. அப்போதிருந்த நிலையில் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அந்த அணியின் சில நபர்களுடன் சஷாங்க் பேசிக்கொண்டிருந்தார். விசாரித்ததில், அந்தக் குழுவுடன் நாம் பைக்குகளை மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்றனர்.
(தொடரும்)
- ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.