கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்க...
மொழி தெரியாமல், பணமும் இல்லாமல் தவித்த தருணம்! - ஆம்ஸ்டர்டாம் டு ஸ்விஸ் சுவாரஸ்ய அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விகடனின் சுற்றுலா அறிவிப்பைக் கேட்டதுமே மனம் பழைய நினைவுகள் பலவற்றை மீட்டெடுத்தது.
ஆம்ஸ்டர்டாம் நகரமும் அதன் அழகான தெருக்களும் மனதில் ஊர்வலம் வந்தன. அங்கு பயணித்த சுகமான பேருந்து பயணங்கள் அனுபவங்கள் எல்லாமே சுவையானவை.
டிக்கெட் வாங்க திணற வேண்டாம். கார்டை ஸ்வைப் பண்ணிவிட்டு வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.
இறங்கும் போது மறுபடியும் ஒருமுறை ஸ்வைப் பண்ணினால் போதும். நடத்துநர் கிடையாது . ஓட்டுநர் மட்டுமே. அவரும் மிகவும் சிநேக பாவத்துடன் பழகுவார். எல்லாமே எங்களுக்கு விசித்திரமாக இருந்தது.

யாராவது தெரியாமல் வழியில் வந்துவிட்டால் டிரைவர்கள் திட்டுவதை பார்த்திருக்கிறோம். இங்கே நிறுத்தி போ என்று சகஜமாக தலையாட்டுவதை பார்க்கலாம். அது மட்டுமில்லை. மிகச் சரியாக அறிவிக்கப் பட்ட நேரங்களில் வந்து நிற்கும். எந்த ஒரு வேலையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ள முடியும்.
இது தவிர பஸ்களில் பெரிய சூட்கேஸ்கள் ஏன் சைக்கிள் கூட எடுத்து போகமுடியும்.
ஒரு முறை நாங்கள் வண்டியில் தவறவிட்ட ஸ்வெட்டரை எடுப்பதற்காக அதே நிறுத்தத்தில் காத்திருந்தோம் . மறுபடி நாற்பதே நிமிடத்தில் வந்த அந்த பஸ்ஸில் இருந்த ஸ்வெட்டரை எடுத்துக் கொண்டு வந்தோம் என்றால் நம்ப முடிகிறதா!
ஸ்கந்தா டிராவல்ஸ் மூலம் ஸ்விட்சர்லாந்து சென்று வந்தோம். அதுவும் பஸ் பயணம்தான்.
பெரிய பட்டாம் பூச்சி ஒன்றின் மீது அமர்ந்து போவது போல சுகமான அனுபவம். ஓட்டுநர் அந்த பெரிய பேருந்தை மிக லாவகமாக ஓட்டி வந்தார்.
பெரும்பாலும் இந்தியர்களே கலந்து கொண்ட அந்தப் பயணத்தில் அதிகம் இளைஞர்களே! ஐடியில் பணிபுரிபவர்கள் மனைவி குழந்தையுடன் வந்திருந்தார்கள். எங்களைப் போல வயதானவர்கள் ஒரு சிலரே.

வித்தியாசமாக இரண்டு பெண்மணிகள்.
மகனின் குழந்தையை பார்த்துக் கொள்ள வந்த அம்மாவும், பெண்ணின் அம்மாவும் சேர்ந்து வந்திருந்தனர். மூன்று மாதங்களே ஆன குழந்தையை அக்கறையுடன் கண் விழித்து பார்த்துக் கொண்டவர்களுக்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என்று அவர்களின் பிள்ளைகள் அனுப்பியிருந்தார்கள். எல்லோருமே மிகவும் அனுசரணையுடன் நடந்து கொண்டார்கள். தெலுங்கு , கன்னடம் மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் பாடி அசத்தினார்கள்.
ஸ்விஸ் முழுவதும் மலைத் தொடர்கள். வெள்ளியால் செய்தது போல வெள்ளைப் பனியால் மூடிய மலைகள். அங்கங்கே சின்ன சின்னதாக பனி உருகிய நீரின் ஓட்டம். சுற்றிலும் இயற்கையின் பேராட்சி.
டிட்லிஸ் மலைத் தொடரின் உச்சிக்கே சென்றது மிகவும் சிலிர்ப்பான அனுபவம்.முதலில் ஒரு கேபிள் காரில் பாதி தூரம் பயணம்.அதற்குப் பிறகு கண்ணாடிச்சுவருடன் கூடிய சுற்றும் ஒரு வட்டமான கேபிள் காரிலும் பயணித்தோம்.சுற்றிலும் தெரிந்த பனி மூடிய மலைகள்.பனி உருகி சின்ன சின்ன நீரோடைகள்கீழ்நோக்கி வழியும் காட்சிகளுடன் சுற்றிலும் பசுமையான புல் வெளியும் , சில சில மரங்களும் பார்க்க அருமையான காட்சி.

3062 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பனிக்கட்டிகளை தூக்கிப் போட்டு விளையாடினோம். பனியில் சறுக்கி ஸ்கேட்டிங் செய்தோம். அங்கு பல விதங்களில் என்ஜாய் பண்ணுவதற்கென்றே cliff வாக். இரண்டு பக்கமும் கம்பிவேலிகளுடன்கூடிய ஒரு தொங்கு பாலம். நடக்கும்போது அப்படியே ஆடுகிறது. பயத்தை மீறிய ஒரு சந்தோஷம். பனிக்குகைகளின் நடுவே புகுந்து வந்தோம். அந்த சுவர்களில் அழகான ஓவியங்கள்அலங்கரிக்கின்றன.
அங்கே "தில்வாலே துல்ஹன் லே ஜாயேங்கே" திரைப்பட நடிகர்கள் ஷாருக்கான், கஜோல் இருவரின் கட் அவுட்டும் பார்த்தோம். இந்தியன் என்ற பெருமை வந்தது. இனி ஒரு முறை வரமுடியாது என்று உணர்ந்ததால் களைப்பையும் மீறி அந்த இயற்கையை அனுபவித்தோம்.
ஐந்து தளங்களில் ஒரு தளத்தில் ஃபோட்டோக்கள் எடுத்து தரப் படுகின்றன.ஸ்விஸ் நகர இயற்கை காட்சிகளுடன் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள். நன்றாக சுற்றி விட்டு கீழிறங்கும் போது எங்களுக்கு இரண்டாவது தளத்தில் சாப்பாடு தருவதாக டிராவல்ஸ் நிறுவனத்தினர் சொல்லியிருந்தார்கள்.

தனித்தனியாக பார்த்துவிட்டு கேபிள் காரில் திரும்பும் போது இரண்டாவது தளத்தை தவறவிட்டு விட்டோம். கீழ்த் தளத்துக்கு வந்த பிறகு எப்படி திரும்பிப் போவது என்று தெரியவில்லை. எங்கள் க்ரூப் முழுவதும் இரண்டாவது தளத்தில் இருப்பார்கள். நாங்கள் நாலு பேர் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டோம். பசி , களைப்பு , திகைப்பு எல்லாம் சேர்ந்த ஒரு நிலை.
பாஷை தெரியாது . பணமும் கிடையாது. க்ரூப்பில் வந்ததால் எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுடன் வந்தவர் நாமே திரும்பி போகலாம் என்று அந்த நுழைவு வாயிலில் சென்று உள்ளே போக பார்த்தார். இந்தியாவில் இருந்து போயிருக்கிறோமே ! அந்த மனப்பான்மை எங்கே போகும்! எல்லாமே கார்ட் ஸ்வைப் பண்ணினால் தான் இயங்கும் என்பதை அவருக்குப் புரிய வைக்க முடியவில்லை.
அதற்குள் அங்கிருந்த அதிகாரி எங்களை வெளியே போகச் சொல்லி விரட்ட வந்தார். நல்லவேளையாக என் கணவர் நிதானமாக விஷயத்தை சொன்னதும் சரி போங்கள் என்று எங்கள் நால்வரையும் மறுபடியும் திருப்பி அனுப்பினார். இரண்டாவது தளத்தில் அந்த ஹால் மூடியிருந்தது. திறக்க வேண்டுமானால் அதற்கும் கார்ட் ஸ்வைப் பண்ணணும் .
இடத்துக்கு வந்தால் அங்கே எங்கள் மக்கள் எல்லோருமே நின்றுகொண்டிருந்தார்கள். ஆர்கனைசர் இன்னும் வரவில்லை என்று சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்கள் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பஸ்ஸில் வந்தவர்களுக்கு அங்கு சாப்பாடு.
எங்கள் பஸ்ஸில் வந்தவர்களுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நாங்கள் பெரிய கூட்டத்துக்கு நடுவே ஓடி ஓடிப் போய் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட்டோம். சப்பாத்தி , சப்ஜி , ஏதோவொரு ஸ்வீட்.
நம் ஊர் சாப்பாட்டுக்கு நாக்கும் மனமும் ஏங்கியது . இன்றைய நாளில் எத்தனையோ உணவுக்கடைகளில் தோசை இட்லி என்று கிடைக்கின்றன. நடுவில் ஓர் ஹோட்டலில் வடையும் காஃபியும் கிடைத்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஜிங்ஃப்ரோ மலைச் சிகரத்தை பார்த்தது இன்னும் ஒரு ருசிகரமான அனுபவம். இது முழுக்க முழுக்க ரயிலில் தான் பயணம் . மலை மீது ஏறும் போதே வெப்பநிலை , உயரம் எல்லாம் அங்கிருக்கும் மானிடரில் தெரிகிறது. கூடவே மாறும் வெளிச் சூழல். உயரத்தில் போக போக மூச்சு அடைக்கிறது. பயம் , பரவசம் திகைப்பு ஆச்சரியம் என்று கலவையான உணர்வுகளுடன் சிகரத்தை அடைந்தோம்.
மிக உயரமான இடத்தில் நிற்கிறோம் என்ற பெருமிதம் வருகிறது. எங்கு பார்த்தாலும் பனி மூடிய மலைத்தொடர்கள். புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என்று குதூகலிக்க தோன்றியது. உல்லாசப் பயணிகள் எல்லா நாடுகளிலிருந்தும் வந்து மலைகளின் அழகை ரசிக்கிறார்கள்.
திரைப்படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த பல காட்சிகள் கண்ணெதிரே விரியும் போது அந்த அனுபவமே தனிதான்."ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் " பாடலில் சிவாஜியும் காஞ்சனாவும் நடித்த இடங்களை பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.
ஒரு வாரப் பயணம் முடிந்து திரும்பும் போது மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.