2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்
புதுப்பொலிவில் கல்லணை! வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!!
டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைக்கவிருப்பதால் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கல்லணை வரலாற்றில் முதல்முறையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீரை நாளை மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு சனிக்கிழமை இரவே தண்ணீா் வந்துவிடும். எனவே தமிழக முதல்வா் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.
இதனை முன்னிட்டு கல்லணை மதகுகள் சீரமைக்கப்பட்டு, கல்லணை சுவர்கள் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதேபோல் கரிகால சோழன், காவேரித்தாய், அகத்தியர் முனிவர், ராஜராஜசோழன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.