விமான விபத்து: டிஎன்ஏ சோதனைக்காக காத்திருக்கும் உறவுகள்! கண்ணீருடன்
இந்தியா வந்து லண்டன் திரும்பியவர்களும், லண்டனில் புது வாழ்வைத் தொடங்கச் சென்றவர்களும் விமான விபத்தில் பலியான நிலையில், அவர்களது உறவினர்கள், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள்.
கொண்டாடுவதற்காகவும், புது வாழ்வைத் தொடங்குவதற்காகவும் இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்டவர்கள், ஏர் இந்தியா விமான விபத்தினால் பலியான நிலையில், அவர்களது உறவுளை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
அகமதாபாத் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு சில அறைகளில் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலரும் பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி கடும் மன அழுத்தத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். பலர், இங்கிருக்கும் சூழ்நிலை குறித்து குடும்பத்துக்கு போனில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர், தரையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி செல்போனில், தங்களை துயரில் விட்டுச் சென்ற உறவைப் பார்த்தபடி கண்ணீர்சிந்தியபடி டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள்.
மறுபக்கம், அரசு மருத்துவமனையின் உடல்கூறாய்வு அறையில் தடய அறிவியல் துறையினர், தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் உடல் கூறாய்வுகளை செய்தும், டிஎன்ஏ சோதனைக்காள ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.