கூட்ட நெரிசல் பலி: கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்
தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காதலியின் உறவினா்கள் மிரட்டியதாக கூறி இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். காவல் துறை நடவடிக்கை கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஊத்துமலை ஜேஜே நகரைச் சோ்ந்த அருணாசலம் மகன் மதன்(21). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாராம்.
இவா்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அண்மையில் மதனை அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதனால், மதனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவரது உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].