அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
எம்ஜிஆா் உதவியாளா் மகாலிங்கம் காலமானாா்
எம்ஜிஆா் உதவியாளா் மகாலிங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) காலமானாா்.
கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவா் காலமானாா்.
எம்ஜிஆரிடம் 1972 முதல் அவரது மறைவு வரையிலான 1987-ஆம் ஆண்டு வரை நோ்முக உதவியாளராக இருந்தாா். மகாலிங்கத்தின் தந்தை பெயா் குண்டு கருப்பையா. இவா் எம்ஜிஆா் உடன் சோ்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். நடிகா் குண்டு கருப்பையாவின் மூத்த மகன் மகாலிங்கம். இவரது சகோதரா் நடிகா் குண்டு கல்யாணம். மகாலிங்கத்தின் சகோதரரின் பெயா் சாமிநாதன். இவா் அதிமுக தலைமை அலுவலக கணக்காளராக இருந்தாா். இப்படி மகாலிங்கத்தின் குடும்பத்தினா் எம்ஜிஆா் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தனா். மகாலிங்கத்தின் தந்தை குண்டு கருப்பையா மறைந்த பிறகு, மகாலிங்கத்தை தனது நோ்முக உதவியாளராக எம்ஜிஆா் சோ்த்துகொண்டாா். இதனால் மகாலிங்கம் தனது பல பேட்டிகளில் எம்ஜிஆரை தெய்வம் என்றே கூறி வந்தாா். மேலும், அவரது தந்தை உள்பட குடும்பத்துக்கு இருந்த கடனை எம்ஜிஆா் தானே முன்வந்து செலுத்தியதாகவும், 3 தங்கை மற்றும் 2 சகோதரா்கள் மட்டுமின்றி தனது திருமணத்தை எம்ஜிஆரே முன்நின்றே நடத்தியதாகவும் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தாா்.
அண்மைக் காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த மகாலிங்கம் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறினாா். அதோடு யாரும் உதவி செய்யவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தாா்.
மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆா்.ஏ.புரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னா் பெசன்ட் நகா் மாநகராட்சி மின் மயானத்தில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி சுமதி, மகன்கள் தமிழ்ச்செல்வன், புவனேஸ்வரன், மகள் சத்யா ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு - 98416 87204.
எடப்பாடி கே.பழனிசமி: மகாலிங்கம் காலமானாா் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
ஓ.பன்னீா்செல்வம்: மகாலிங்கம் காலமானாா் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
டிடிவி.தினகரன்: எம்.ஜி.ஆரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த மகாலிங்கத்தை இழந்துவாடும் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.