மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங...
எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?
கடல்கடந்து வான்வெளி வழியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது அனைவரின் கனவாகவே இருக்கிறது. வேலை வாய்ப்பு, உயர்கல்வி, புனிதப் பயணம், சுற்றுலா, வணிக நோக்கங்களுக்காக, மருத்துவ மற்றும் குடும்ப வருகைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய பயண ஆவணமான பாஸ்போர்ட் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் உலகளாவிய அளவில் பாஸ்போர்ட்டின் தேவையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்தப் பாஸ்போர்ட்டை இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான பாஸ்போர்ட்டை இணையத்தில் எளிய முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
மக்களிடையே அதிகரித்துள்ள பாஸ்போர்ட் தேவையை பூர்த்தி செய்ய, வெளியுறவு அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாஸ்போர்ட் சேவா திட்டத்தை தொடங்கியது. கடந்தாண்டு பிப்ரவரி மாத நிலவரத்தின்படி இதுவரை 9.6 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவராக நீங்களும் எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பது பற்றி இங்கு காணலாம்.
எளிய முறையில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்: https://www.passportindia.gov.in
லிங்கில் சென்று புதிய பயனராக பதிவு செய்ய வேண்டும்.
அதில், அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பெயர், துணைப் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, லாகின் ஐடி(login ID), பாஸ்வேர்ட் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து அதை செய்து முடித்ததும் ‘ரிஜிஸ்டர்’ என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நமது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங்க் வரும்; அந்த லிங்கை கிளிக்கை முதலில் ஆக்டிவேட் செய்யவேண்டும்.
பின்னர், மீண்டும் பாஸ்போர்ட் சேவா இணையதளத்துக்குச் சென்று 2-வதாக இருக்கும் Existing User Login - ஐ கிளிக் செய்து அதில், பயனர் ஐடி, கடவுச்சொல் கொடுக்க வேண்டும்.
அதில், Apply for Fresh Passport/Re-issue of Passport - என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்னர், எந்த வகையான பாஸ்போர்ட் தேவை என்பதைப் பற்றி கேட்கும். நார்மல் அல்லது தட்கல் பாஸ்போர்ட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். கூடவே எத்தனை பக்கம் கொண்ட பாஸ்போர்ட் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். [அதன் பிறகு fresh passport, normal, 36 pages ஆகியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்]
முடிந்தவுடன் உங்களது அரசு ஆவணங்களில் உள்ளபடியே பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், வசிப்பிடம், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், கல்வி தகுதி, பணி, பெற்றோர் பெயர், முகவரி போன்றே சுய விவரங்களை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பதாரரின் குற்றப் பின்னணி, இதற்கு முன் விண்ணப்பித்து மறுக்கப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களும் கேட்கப்படும்.
முக்கியமான 2 அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அதில் பதிவேற்ற வேண்டும். [ஆதார், பான்கார்ட் போன்றவை]
Your application form has been submitted successfully என்று அதில் காண்பிக்கும்.
Your Application Reference Number(ARN) is: 24-101**0809 என்பது மாதிரி ரெபெரன்ஸ் ஐடி ஒன்று உருவாகியிருக்கும்.
அதன்கீழாகவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த Pay and Schedule Appointment -ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக, நேரடி விசாரணைக்குச் செல்லும் நேரம், அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றைத் தேர்வு செய்து முன்னர் பதிவேற்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.
இதுமுடிந்தவுடன் நீங்கள் கொடுத்துள்ள வீட்டு முகவரிக்கு காவல் துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்துவார்கள்.
இது முடிந்ததும் குறைந்தபட்சம் 10 நாள்களில் பாஸ்போர்ட் உங்களது வீட்டுக்கே வந்துவிடும்.