Dragon: `இளம் இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும்!'...
PMK : 'எம்.ஜி.ஆரும் அழைத்தார்; கலைஞரும் அழைத்தார்; எங்கும் செல்லவில்லை!' - விரக்தியில் ஜி.கே.மணி
'ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பு!'
ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் பா.ம.கவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பா.ம.கவில் நிலவும் விரிசலால் தான் பெரும் மனவேதனை அடைந்திருப்பதாக விரக்தியில் பேசியிருக்கிறார்.

ஜி.கே.மணி பேசியதாவது, 'செல்வப்பெருந்தகையுடனான சந்திப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தை அல்ல. அது மரியாதை நிமித்தமான சந்திப்பே.'அய்யாவுக்கும் சின்னய்யாவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை தீர வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். இந்தப் பிரச்சனை நீண்டுகொண்டே செல்வது பெருத்த மனவேதனையை கொடுக்கிறது. இதற்கிடையில் என் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
'எல்லாரும் அழைத்தார்கள்!'
நான் யாரிடமோ கூட்டணி பேசிக்கொண்டிருப்பதாகவும், எந்தக் கட்சிக்கோ செல்லப்போவதாக பேசிக்கொள்கிறார்கள். இதெல்லாம் மனவேதனையைத்தான் கொடுக்கிறது. 45 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். சேர்மனாக இருந்தபோது ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தி வந்தேன். அதைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் அழைத்தார்.

வாரியப் பொறுப்புகளெல்லாம் தருகிறேன் கட்சியில் இணைந்துவிடு என்றார். ஒரு தேர்தலின் போது திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கலைஞர் என்னை தொடர்புகொண்டார். மருத்துவரிடம் ஆதரவுக்கடிதம் வாங்கி வாருங்கள், உங்களை துணை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்றார். ஜெயலலிதாவுக்கும் என்னைப் பிடிக்கும். நீங்கள் என்னை விமர்சித்தாலும் நாகரீகமானவர்.

நீங்கள் இருக்க வேண்டிய கட்சி அது இல்லை. அதிமுகவுக்கு வாருங்கள். உங்களுக்கு நல்ல இடத்தைக் கொடுக்கிறேன் என ஜெயலலிதா கூறினார். அப்படிப்பட்ட என்னை கொச்சையாக பேசுகிறார்கள். மருத்துவர் அய்யாவிடம் தனியாக பேசும்போது கண்ணீர் விடுகிறார். சமூகவலைதளங்களில் அய்யாவைப் பற்றியும் சின்னையாவைப் பற்றியும் அவதூறான தகவல்களை பரப்பாதீர்கள். மாறி மாறி பொறுப்புகளை போட்டுக் கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதல்ல.' என்றார்.