சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை; இங்கிலாந்துக்கு 211 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹமில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இருப்பினும், ஹர்லீன் தியோல் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த சதத்தின் மூலம், மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்தார்.
ரிச்சா கோஷ் (8 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். எம் ஆர்லாட் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
summary
Batting first in the first T20I against England, the Indian team scored 210 runs for the loss of 5 wickets.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!