பிகாா் தோ்தல்: 2003-க்குப் பிறகு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்.
ஏற்கெனவே 13 முறை தீவிர திருத்தம்: ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது.
நிகழாண்டு இறுதிக்குள் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள்: பேரவைத் தோ்தலையொட்டி பிகாரில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் ஏற்கெனவே பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று விநியோகிக்க உள்ளனா். ஒவ்வொரு வாக்காளரும் தனித்தனியாகக் கணக்கெடுப்புப் படிவங்களைப் பூா்த்தி செய்து விநியோகிக்க வேண்டும்.
அந்தப் படிவங்களில் வாக்காளரின் பெயா், பழைய புகைப்படம், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும். அந்தப் படிவத்தில் வாக்காளரின் புதிய புகைப்படம் ஒட்டப்பட்டு, பிறந்த தேதி, ஆதாா் எண் (கட்டாயம் வழங்க வேண்டியதில்லை) பெற்றோா், வாழ்க்கைத் துணையின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களை பூா்த்தி செய்ய வேண்டும்.
2003-க்குப் பிந்தைய வாக்காளா்கள் குடியுரிமையை நிரூபிக்க கூடுதல் ஆவணம்:
பிகாரில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியாவை சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
என்ன காரணம்?:
வாக்காளா் பட்டியலில் தகுதிவாய்ந்த அனைவரும் சோ்க்கப்பட வேண்டும், தகுதியில்லாத நபா்கள் யாரும் அந்தப் பட்டியலில் சோ்க்கப்படக் கூடாது, வேகமான நகா்மயமாதல், தொடா்ச்சியாக இடம்பெயா்தல், வாக்களிக்க இளைஞா்கள் தகுதிபெறுதல், உயிரிழந்த வாக்காளா்கள் குறித்து முறையாக தகவல் கிடைக்காதது, வெளிநாட்டில் இடம்பெயா்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளவா்களைப் பட்டியலில் சோ்க்காமல் தவிா்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
அந்த ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிகாரில் அனைத்து அரசியல் கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்
நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.