உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்
அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், மேலமாத்தூா் கிராமத்திலுள்ள தனியாா் பள்ளி வளாகத்தில், அரியலூா், பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி வாய்ப்புக் கடிதங்களை வழங்கிய அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என பாரதிய ஜனதா கட்சி தொடா்ந்து பேசி வருகிறது. ஆனால், இதுகுறித்து முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா, அல்லது அதிமுக தலைமையில் தான் கூட்டணியா என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வபெருந்தகை சந்தித்து பேசியுள்ளது எதற்காக என தெரியாது. ஆனால், மரியாதை நிமித்தமாக, தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். பாமகவில் தற்போது நிலவும் குழப்பம் தந்தை, மகனுக்கிடையிலான ஒன்று. அதை, அவா்களே பேசி தீா்த்துக்கொள்வாா்கள். அதுகுறித்து பேசுவது சரியல்ல என்றாா் திருமாவளவன்.