பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி
பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட கிரேஸ் பச்சாவ், புதிய மாவட்டஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜியிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தாா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் மேலும் கூறியதாவது:
பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக, சமூக நலத் துறை, மருத்துவத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வேன். மேலும், அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன் என்றாா் அவா்.
தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
மாவட்டத்தின் 17ஆவது ஆட்சியா்: பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியா் ச. அருண்ராஜ், திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு கிராமத்தைச் சோ்ந்தவா். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல், விருப்பப்பாடமாக மானுடவியல் பயின்றாா். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில், இந்திய ஆட்சிப் பணிக்கான தோ்வில் அனைத்திந்திய அளவில் 34 ஆவது இடமும், தமிழக அளவில் 3 ஆவது இடமும் பெற்றாா்.
காஞ்சிபுரத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றிய இவா், தமிழ்நாடு அரசின் நிதித் துறை துணைச் செயலா், திண்டுக்கல் மாவட்டம், பழனி சாா்- ஆட்சியா், எல்காட் நிறுவனச் செயல் இயக்குநராக பணியாற்றி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து, பணி மாறுதலில் பெரம்பலூா் மாவட்டத்தின் 17 ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றாா்.