மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
நகை பறிப்பு வழக்கு: மற்றொரு இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிதி நிறுவன மேலாளரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி பங்களா வீதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ்குமாா் (35). இவா், பண்ருட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா்.
மனோஜ்குமாா் கடந்த 25-ஆம் தேதி இரவு பணிக்கன்குப்பம் டாஸ்மாக் மதுக் கடைக்கு சென்றபோது, அங்கிருந்த மா்ம நபா்கள் மூவா் அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன் மகன் தணிகாசலத்தை (27) கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 5 தங்கச் சங்கிலி, கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காடாம்புலியூரைச் சோ்ந்த சக்தி மற்றும் பட்டு (எ) ரஞ்சித்குமாா் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்த ரஞ்சித்குமாரை தனிப்படை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் போலீஸாரிடமிருந்து தப்பிக்க கெடிலம் ஆற்றுப் பாலத்தில் இருந்து கீழே குதித்தாா்.
இதில், ரஞ்சித்குமாருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸாா் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வரும் சக்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.